கிளவுஸ் இல்லாத காரணத்தால் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்க மறுத்துள்ளார் ஆரம்ப சுகாதார அமைப்பின் பெண் ஊழியர் ஒருவர்.
ஆக்ரா பகுதியை சேர்ந்தவர் அனில் குமார் மற்றும் குத்தி தேவி. குத்தி தேவி கர்ப்பமாக இருந்த நிலையில், கடந்த 18ம் தேதி இரவு 9.30 மணி அளவில் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இதனால் குத்தி தேவியை அனில் குமார் அருகில் இருந்த ஆரம்ப சுகாதார மையத்திற்கு அழைத்துச்சென்றுள்ளார். அங்கு, குத்தி தேவியை பரிசோதனை செய்த பெண் ஊழியர், இருவரையும் அடுத்த நாள் காலை வரச்சொல்லியுள்ளார். ஆனால், குத்தி தேவிக்கு வலி அதிகரித்துக்கொண்டே போயுள்ளது.
அதனை அடுத்து, அனில் குமார் அந்த ஊழியர்களிடம் சிகிச்சை அளிக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் சிகிச்சை அளிக்க மறுத்தது மட்டுமல்லாமல் அனில் குமாரை வெளியேறுமாறு வற்புறுத்தியுள்ளனர். ஆனாலும் மனைவி பிரசவ வலியால் துடிப்பதை பார்த்த அனில் குமார் அவர்களிடம் சிகிச்சை அளிக்குமாறு தொடர்ந்து கேட்டுள்ளார்.
இறுதியாக சிகிச்சை அளிக்க ஆரம்ப சுகாதார ஊழியர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால், அங்கு கிளவுஸ் இல்லாததாக் அனிலை அனுப்பி சர்ஜிக்கல் கிளவுஸ் வாங்கிவருமாறு கூறியுள்ளனர். ஆனால், ஊரடங்கு காரணமாக கிளவுஸ் எங்கும் கிடைக்கவில்லை.
கிளவுஸ் இல்லாததால் பிரசவம் பார்க்க மறுத்துவிட்டனர் ஆரம்ப சுகாதார ஊழியர்கள். அவர்களிடமான நீண்ட போராட்டத்திற்கு பிறகு குத்தி தேவியும் அனில் குமாரும் வீட்டிற்கு திரும்பிவிட்டனர்.
ஆனால், காலை சுமார் 3 மணி அளவில் குத்தி தேவி மயக்கமடையவே, தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளார் அனில் குமார். குத்தி தேவிக்கு ஸ்கேன் செய்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வயிற்றின் உள்ளேயே குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து, ஆரம்ப சுகாதார ஊழியர்கள் மீது அனில் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.