
ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி இன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. ஜி.எஸ்.டி அறிமுக விழாவிற்காக நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டத் தொடருக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. ஜி.எஸ்.டி (சரக்கு மற்றும் சேவை வரி) வரி நாடு முழுவதும் நாளை அமலுக்கு வருவதால் பல பொருட்களும் விலை உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
நம் நாட்டில் தற்போது உற்பத்தி வரி, விற்பனை வரி, சேவை வரி உள்ளிட்ட பல்வேறு விதமான மறைமுக வரிகள் உள்ளன. இந்த வரிகளுக்கு மாற்றாக நாடு முழுவதும் ஒரே சீரான வரியான சரக்கு, சேவை வரி என்ற ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி, ஜூலை 1-ந் தேதி (நாளை) முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்படுகிறது.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்துவதற்காக வெள்ளிக் கிழமை இன்று நள்ளிரவு நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற மைய மண்டபத்தின் நடைபெறும் இந்த விழாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி முன்னிலை வகிக்கிறார். பிரதமர் மோடி ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை தொடங்கி வைத்துப் பேசுகிறார்.
விழாவில் கலந்து கொள்ளுமாறு அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், விழாவில் பங்கேற்க மாட்டோம் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், ஜி.எஸ்.டி அறிமுக விழாவில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் பங்கேற்கமாட்டர் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் ஐக்கிய ஜனதா தளத்தின் சார்பில் பீகார் அமைச்சர் விஜேந்திர யாதவ் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் 17 எதிர்க்கட்சிகள் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நிதிஷ்குமார் மட்டும் ஆதரவு தெரிவித்து இருந்தார். இருப்பினும் நிதிஷ் குமார் தனது முடிவை வாபஸ் பெற வேண்டும் என்று லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட பலர் வலியுறுத்தி வருகின்றனர். இத்தகைய நிலையில், இன்று நள்ளிரவு நடைபெறவுள்ள ஜி.எஸ்.டி. அறிமுக விழாவில் நிதிஷ்குமார் பங்கேற்காமல் தவிர்த்துள்ளார்.


