
புது தில்லி:
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பாஜகவின் சார்பில் வேட்பாளராக வெங்கய்ய நாயுடு அறிவிக்கப் பட்டிருக்கிறார். அவர் பெயரை கட்சியின் தலைவர் அமித் ஷா அறிவித்தார்.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் யார் போட்டியிடுவது என்று பலத்த விவாதம் கட்சிக்குள் எழுந்தது. இருப்பினும், பலரின் தேர்வாக வெங்கய்ய நாயுடுவின் பெயரே இருந்தது.
அவர், நாடாளுமன்றத்தில் திறம்படச் செயலாற்றி வருபவர். பழுத்த அனுபவம் கொண்டவர். குடியரசுத் துணைத் தலைவர்தான், மாநிலங்களவைக்கும் தலைவராக இருந்து வழிநடத்துபவர் என்பதால், இதற்கு நாடாளுமன்ற அனுபவமும் தேவைப்படுகிறது. எனவே வெங்கய்ய நாயுடு பொருத்தமாக இருப்பார் என்று கருதப் பட்டது.
இத்தகைய பின்னணியில் இன்று கட்சியின் தலைவர் அமித் ஷா தலைமையில் கட்சியின் நாடாளுமன்றக் குழு கூடி, வெங்கய்ய நாயுடு பெயரை தேர்வு செய்தது. மேலும் சிலர் பெயர் அடிபட்டாலும், இறுதியில் இவர் தேர்வாகியிருக்கிறார். இதன் மூலம் தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த அமித் ஷா, வெங்கய்ய நாயுடு நாளை மனுத் தாக்கல் செய்வார் என்று கூறினார்.


