
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு வசதிகள் செய்து கொடுப்பதற்காக சிறை விதிகள் மீறப்பட்ட விவகாரத்தை ஒட்டு மொத்த இந்தியாவும் பார்த்து வியந்து நிற்கிறது. லஞ்சம் வாங்கிக் கொண்டு சிறைக் கைதியை சொகுசாக சிறையில் உலவ விட்டுள்ள கர்நாடக சிறைத்துறையின் கருணைதான் இப்போது ஹாட் டாபிக்! சூடான விவாதங்கள் கிளம்பிக்கொண்டிருக்கின்றன.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சிறைக் கைதி சசிகலா சிறையில் சொகுசாக வாழ்க்கை நடத்தும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே சசிகலா சிறையில் நைட்டியுடன் ஜாலியாக வலம் வரும் வீடியோ வெளியாகி இருந்த நிலையில் தற்போது புதிய வீடியோ ஒன்று வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள சசிகலா சுடிதார் அணிந்து கொண்டு கையில் பேக்குடன் எங்கேயோ கிளம்பத் தயாராக நிற்கிறார். அவருடன் சிறையில் அடைக்கப்பட்ட இளவரசி சிகப்பு நிற புடவையில் நிற்கிறார். இந்த வீடியோ கர்நாடக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


