
சேலம் ஆடிட்டர் ரமேஷ் நினைவு நாளில் மாநிலங்களவையில் இல.கணேசன் அஞ்சலி செலுத்தினார்.
இது குறித்து அவரது அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்…
ஐ.எஸ் பயங்கரவாத நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிய ஒருவர் சமீபத்தில் தமிழகத்தில் கைது செய்யப்பட்டார். ஏறக்குறைய 25 பேர் அவருக்கு ஒத்துழைததாகக் கூறப்படுகிறது. விசாரணை நடந்து வருகிறது.
அயல்நாடுகளால் ஈர்க்கப்பட்ட தனிநபர் அல்லது அமைப்புகளின் செயல்பாட்டை வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாகப் பார்க்கக் கூடாது. மத்திய அரசு தானாக முன்வந்து, மாநில அரசின் துணையோடு நடவடிக்கை எடுத்து பிரிவினைவாதிகளின் செயல்பாட்டை முளையிலேயேக் கிள்ளி எறிய வேண்டும்.
என் கருத்துப்படி, இவர்களது நடவடிக்கைகள் புதிதல்ல; வைத்திருக்கும் பெயர் மட்டும் தான் புதிது. அந்நிய சக்திகளால் கவரப்பட்ட சமுதாயத்தில் ஒரு பகுதியினரின் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் எண்பதுகளிலேயே துவங்கிவிட்டன. திரு ஜனா. கிருஷ்ணமூர்த்தி தான் அவர்களது தாக்குதலின் முதல் குறி.
ஆங்காங்கே நடத்தப்பட்ட சிறு சிறு கொலைகளாகக் காலூன்றிய பயங்கரவாதம் காலப் போக்கில் குறி வைத்துக் கொலை செய்யும் அளவிற்குத் தலை தூக்கி இருக்கிறது. தேசிய சிந்தனை கொண்ட தொண்டர்கள், தலைவர்களை உள்ளடக்கிய முக்கியஸ்தர்கள், பிரபலங்கள் பலரும் இதனால் கொல்லப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் தான் திரு ரமேஷ். சிறந்த பண்பாளர், பிரபல பட்டயக் கணக்காளர். நான்கு வருடங்களுக்கு முன்பு 19-ஜூலை-2013 அன்று சேலத்தில் அவரது வீட்டின் முன்பாக படுகொலை செய்யப்பட்டார். ஆம், இன்று தான் ஆடிட்டர் ரமேஷ் அவர்களின் பலிதான தினம்.
“தலையிடுங்கள்; தடுத்திடுங்கள்; தீவிரவாதத்திற்குத் துணை போகும் தேச விரோத சக்திகளை அடியோடு அழித்திடுங்கள்!” என்பதே மத்திய அரசுக்கு, குறிப்பாக உள்துறை அமைச்சகத்துக்கு இந்நாளில் எனது பணிவான வேண்டுகோள்.


