ஐ.பி.எல் 2023 – 14ஆம் நாள் – 13.04.2023
— முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ––
ஐ.பி.எல் 2023 தொடரின் 14ஆம் நாளான நேற்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் அணி வென்றது. பஞ்சாப் அணியை (153/8, மேத்யூ ஷார்ட் 36, பானுகா 20, ஜித்தேஷ் 25, சாம் கரண் 22, ஷாருக் கான் 22, மோஹித் ஷர்மா 2/18) குஜராத் அணி (154/4, கில் 67, சாஹா 30, சாய் சுதர்ஷன் 19, மில்லர் 17) 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
கடந்த போட்டியில் ரிங்கு சிங் அதிரடியால் கையிலிருந்த வெற்றியை கோட்டை விட்ட குஜராத்துக்கு இம்முறை கேப்டனாக ஹர்திக் பாண்டியா திரும்பினார். அவர் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப்புக்கு முதல் ஓவரிலேயே பிரப்சிம்ரன் சிங் டக் அவுட்டாகி ஏமாற்றினார். கடந்த போட்டியில் நங்கூரமாக நின்ற கேப்டன் ஷிகர் தவானும் 8 ரன்களில் அவுட்டாகி சென்றார். அதனால் 28/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணிக்கு அடுத்ததாக வந்த மேத்தியூ ஷார்ட் அதிரடியாக விளையாட முயற்சித்து 6 பவுண்டரி 1 சிக்சருடன் 36 (24 பந்துகள்) ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவருடன் இம்பேக்ட் வீரராக விளையாடிய பனுகா ராஜபக்சா தடுமாறி 20 (26 பந்துகள்) ரன்களிலும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜித்தேஷ் சர்மா 25 (23 பந்துகள்) ரன்களிலும் அவுட்டாகி பின்னடைவைக் கொடுத்தனர். அதனால் 115/4 என தடுமாறிய பஞ்சாப் 150 ரன்களை தொடுமா என்ற சந்தேகம் நிலவிய போது கடைசி நேரத்தில் தமிழக வீரர் ஷாருக்கான் அதிரடியாக 1 பவுண்டரி 2 சிக்சருடன் 22 (22 பந்துகள்) ரன்களும் சாம் கரண் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 22 (9 பந்துகள்) ரன்களும் எடுத்து போராடி அவுட்டானார்கள். அதனால் ஓரளவு தப்பிய பஞ்சாப் 20 ஓவர்களில் 153/8 ரன்கள் எடுத்தது.
குஜராத் சார்பில் அதிகபட்சமாக மோகித் சர்மா 2 விக்கெட்களை எடுத்தார்.
அதனைத் தொடர்ந்து வெற்றிக்கு 154 ரன்கள் என்ற இலக்குடன் ஆடத்தொடங்கிய குஜராத்துக்கு ஆரம்பத்திலேயே சுப்மன் கில்லுடன் இணைந்து 5 பவுண்டரியை பறக்க விட்டு 48 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து, ரித்திமான் சஹா அதிரடியான தொடக்கம் கொடுத்தார். அவர் 30 (19 பந்துகள்) ரன்களில் அவுட்டாக அடுத்த களமிறங்கிய தமிழக வீரர் சாய் சுதர்சன் 2வது விக்கெட்டுக்கு நங்கூரமாக செயல்பட்டு 41 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் கடைசி வரை அதிரடியாக ஆட முடியாமல் 19 (20 பந்துகள்) ரன்களில் நடையை கட்டினார்.
அந்த நிலைமையில் களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் தடுமாறி 8 (11 பந்துகள்) ரன்களில் அவுட்டானார். ஆனால் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாகவும் அதிரடியாகவும் செயல்பட்ட சுப்மன் கில் ரன் ரேட்டை சரிய விடாமல், அரைச் சதமடித்து குஜராத்தை வெற்றி பாதைக்கு அழைத்து வந்தார்.
அதனால் வெற்றியை நெருங்கிய அந்த அணிக்கு சாம் கரண் வீசிய கடைசி ஓவரில் வெறும் 6 ரன்கள் மட்டுமே ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அதிரடியாக விளையாட முயற்சித்த சுப்மன் கில் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 67 (48 பந்துகள்) ரன்களில் க்ளீன் போல்ட்டானார்.
அதனால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் 3ஆவது பந்தில் ராகுல் திவாடியா சிங்கிள் எடுக்க 4வது பந்தில் மில்லர் சிங்கிள் எடுத்தார். அதனால் பரபரப்பு ஏற்பட்டாலும் 5வது பந்தில் பவுண்டரியை பறக்க விட்ட திவாடியா 5* ரன்களும் மில்லர் 17* (18) ரன்களும் எடுத்தனர்.
இதனால் குஜராத் அணி 19.5 ஓவரில் 154/4 ரன்கள் எடுக்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் ஆட வந்த மோஹித் ஷர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.