புது தில்லி: நாடாளுமன்றத்தில் 12 வது நாளாக தொடர்ந்து அமளி நீடிப்பதால், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இன்று நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப் படாது. முன்னதாக, மத்தியில் ஆளும் பாஜக., அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர 3 நோட்டீஸ்கள் நாடாளுமன்ற செயலாளரிடம் வழங்கப்பட்டுள்ளன. தெலுங்கு தேசம் கட்சி சார்பில் 2 நோட்டீஸ்களும், ஒய்எஸ்ஆர்., காங்.,கட்சி சார்பில் 1 நோட்டீஸும் வழங்கப் பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வு கடந்த 5ஆம் தேதி தொடங்கி இதுவரை 11 நாட்கள் நடந்துள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக சில மணிநேரம் கூட அவை அலுவல்கள் எதுவும் நடைபெறவில்லை. தொடர்ந்து 12 வது நாளாக இன்றும் இரு அவைகளிலும் கடும் அமளி தொடர்ந்தது.
இன்று காலை நாடாளுமன்ற அவை கூடியதும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.,க்களும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக., எம்.பி,.க்களும் அமளியில் ஈடுபட்டனர்.
இன்று நாடாளுமன்றம் கூடியது. எதிர்க்கட்சிகளை சேர்ந்த 50 எம்.பி.க்களின் கையெழுத்தை பெற்று தெலுங்கு தேசம் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நாடாளுமன்ற மக்களவையில் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சிகள் இன்றும் அமளியில் ஈடுபட்டதால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்திற்கு எடுப்பதில் சிக்கல் நீடிக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி இன்றும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க., மற்றும் தெலுங்குதேசம் கட்சி எம்.பி.க்களின் தொடர் முழக்கம் காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் கடும் அமளி காரணமாக மக்களவையும் 12 மணி ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும், மீண்டும் அவையின் மையப் பகுதிக்கு வந்து தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்.,, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.பி.,க்கள் கூச்சலிட்டனர்.
அப்போது பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், நம்பி்க்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடத்தவே நாங்களும் விரும்புகிறோம். அதனால் அவை நடக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார். இருப்பினும், கூச்சலும் குழப்பமும் தொடர்ந்ததால், மக்களவை நாளை வரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத்தலைவர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார். எனவே இன்றும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படவில்லை.
முன்னதாக, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரச்சினையில், ஆளும் தே.ஜ. கூட்டணியில் இருந்து அண்மையில் விலகிய தெலுங்கு தேசம், மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் அளித்திருந்தது. நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்கும் 50 எம்.பி.க்களை கணக்கிட முடியவில்லை என்று கூறி அவையை 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் அவைத்தலைவர். இதனால் மீண்டும் 19ஆம் தேதி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று தெலுங்கு தேசம் அறிவித்திருந்தது. ஆனால் இன்றும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டதால், அவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.