புது தில்லி தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் பயன்படுத்தவுள்ள வாக்கு பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாக அரவிந்த் கேஜ்ரிவால் புகார் தெரிவித்தார். தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேறு கட்சிகளுக்கு அளிக்கும் வாக்குகள், பாஜகவுக்கு சாதகமாக மாறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்த புகாரை தலைமைத் தேர்தல் ஆணையம் நிராகரித்தது. தில்லி கண்டோன்மண்ட் பகுதியில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஆம் ஆத்மி கட்சியினர் திங்கள்கிழமை சோதனை நடத்தியபோது, நான்கு இயந்திரங்களில் வேறு கட்சிக்கான பட்டனை அழுத்தினால், பாஜகவின் தாமரை சின்னத்துக்கு எதிரே உள்ள விளக்கு எரிவதாக கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் தலைமை தேர்தல் ஆணையர் எச்.எஸ்.பிரம்மாவிடம் புதன்கிழமை புகார் அளித்தனர். அப்புகாரைப் பரிசீலித்த தேர்தல் ஆணைய அதிகாரிகள், எவ்வித கோளாறுகளுக்கும் இடம் கொடுக்காத வகையில்தான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்றும் பல கட்ட சோதனைகள் நடத்திய பிறகே அவர் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்தனர். மேலும், வேறு கட்சிக்கு அளிக்கும் வாக்கு கூட பாஜகவுக்கு சாதகமாக விழுவதாக சுமத்திய புகாரை நேருக்கு நேராக நிரூபிக்கத் தயாரா? என்று அதிகாரிகள் கேட்டபோது, கேஜரிவால் குழுவினர் சரிவர பதில் அளிக்க வில்லை. இதையடுத்து, அவரது புகாரை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.

