பல ஆண்டுகளாக இருந்து அரசியல் ஆக்கப்பட்டு விட்ட காவிரிப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்பட வேண்டும் என்றே மோடி விரும்புகிறார் என்று மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் கூறியுள்ளார்.
மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் சார்பில், நீர் நிலைகளைத் தூய்மையாகப் பராமரிப்பது தொடர்பான இரு வார நிகழ்வு தில்லியில் நிறைவடைந்தது. அண்மையில் நடைபெற்ற இந்த நிகழ்வு குறித்து விளக்குவதற்காக, தில்லியில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், சத்யபால் சிங், மத்திய நீர்வளத் துறை செயலர் யு.பி.சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், “மோடி அரசு, ஒரு பொறுப்பான அரசு என்று தமிழக மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விவகாரம் அரசியல் ஆக்கப்படுகிறது. ஆனால் அவ்வாறு ஆக்கப்படக் கூடாது. பல ஆண்டுகள் பழமையான இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவே மோடி அரசு விரும்புகிறது. உச்ச நீதிமன்றம் சொன்னபடி, வரைவு திட்டம் உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
வரைவு திட்டத்தை வடிவமைப்பதற்காக, நான்கு மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் நீர்வளத்துறைச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளோம். எத்தகைய செயல் திட்டத்தை அவர்கள் விரும்புகிறார்கள் என்று நான்கு மாநிலங்களிடமும் கருத்து கேட்டுள்ளோம். புதிய அமைப்புக்கு தொழில்நுட்ப வல்லுநர், சட்ட வல்லுநர், அதிகாரி ஆகியோரில் யாரை தலைவராக நியமிக்கலாம் என்பது குறித்தும் கருத்து கேட்டுள்ளோம். கூட்டாட்சி முறையில் மாநிலங்களிடையே கருத்து ஒற்றுமை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு இருக்கிறது என்றார்.