பாட்னா:
பிஹார் சட்டப் பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளார் முலாயம் சிங் யாதவ்.
இதுகுறித்து சமாஜ்வாதி கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் ராம் கோபால் யாதவ் செய்தியாளர்களிடம் கூறியபோது…
தேசியவாத காங்கிரஸ் (என்சிபி), முன்னாள் மத்திய அமைச்சர் தேவேந்திர பிரசாத் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி ஜனதா தளம் (ஜனநாயக), மக்களவை முன்னாள் தலைவர் பி.ஏ.சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி (என்பிபி) ஆகியவற்றுடன் இணைந்து பிஹார் தேர்தலில் போட்டியிட உள்ளோம். இந்தக் கூட்டணி நிதிஷ் குமார், பாஜக கூட்டணிகளுக்கு அடுத்தபடியாக 3-வது கூட்டணியாக இருக்கும். எங்கள் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் பாட்னாவில் வெள்ளிக்கிழமை நடைபெறும். இதில் வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ள முதல்கட்ட தேர்தலில், எங்கள் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.



