கதுவா சிறுமி மானபங்கப் படுத்தப் பட்டு கொலை செய்யப் பட்டதாகக் கூறப்பட்ட வழக்கில், சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப் பட்ட மனுவுக்கு பதிலளித்த உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மறுத்து, வழக்கை பதான்கோட் நீதிமன்ற விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் வழக்கு,உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றுவது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் ஆலோசித்து வந்தது.
இந்நிலையில் இன்று காஷ்மீர் அரசு சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப் பட்டது. அதில், வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்ற காஷ்மீர் அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. காஷ்மீரிலேயே வழக்கை நேர்மையாக விசாரிப்பதாகவும் உறுதி அளித்தது.
ஆனால் இதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், கத்துவா சிறுமி பலாத்கார வழக்கை பஞ்சாப் மாநிலம் பதன்கோட் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை பதான்கோட்டுக்கு மாற்றிய சிறிது நேரத்திலேயே அது குறித்து தெரிவித்த பதன்கோட் நீதிமன்றம், கத்துவா வழக்கு விசாரணை நாள்தோறும் நடத்தப்படும் என்றும் வழக்கின் விசாரணை வீடியோ பதிவு செய்யப்படும் என்றும் கூறியது,. மேலும், வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை மாதம் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
உச்ச நீதிமன்றம் இந்த வழக்கு குறித்து பிறப்பித்துள்ள உத்தரவில், இவ்வழக்கில் பதான்கோட் நீதிமன்றத்தில் காஷ்மீர் அரசு தனது தரப்பு வழக்கறிஞரை நியமித்துக் கொள்ளலாம் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர், வழக்கறிஞர், சாட்சிகள் ஆகியோருக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்று காஷ்மீர் அரசு கேட்டுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, இந்த வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று பல தரப்பிலும் இருந்து கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டன. குறிப்பாக, இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஆதரவாக காஷ்மீரில் பெரும் போராட்டங்கள் நடைபெற்ற்றன. இந்த வழக்கு ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும், பொய்யான தகவலை காஷ்மீர் போலீஸார் அரசியல் காரணங்களுக்காக முன்வைத்து மக்களை மத ரீதியாக பிளவு படுத்தியுள்ளனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
இதை அடுத்து சிபிஐ விசாரணை தேவை என பல்வேறு தளங்களிலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அவற்றை நிராகரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கின்விசாரணை காஷ்மீர் மாநிலத்துக்கு வெளியே பஞ்சாபின் பதான்கோட்டில் நடைபெறும் என்று கூறியது. இது தொடர்பான எச்சரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.