புது தில்லி:
பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கத் தேவை இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது.
தீபாவளி மற்றும் தசரா பண்டிகையின்போது அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு அடைந்து குழந்தைகளுக்கு சுவாசக்கோளாறு, ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்படுவதால் தில்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்று அர்ஜூன் கோபால், ஆரே பண்டாரி, ஜேயா ராவ் பசின் ஆகிய 3 சிறுவர்களின் சார்பில் அவர்களுடைய தந்தையர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ஆதர்ஷ் குமார் கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 8ஆம் தேதி மத்திய அரசுக்கும், தில்லி அரசுக்கும் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீஸுக்கு பதில் அளிக்கும் விதமாக, மத்திய அரசு நேற்று தாக்கல் செய்த மனுவில், பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கத் தேவையில்லை என்று தெரிவித்தது.
தீபாவளியின்போது வெடிக்கப்படும் பட்டாசுகளால் மட்டுமே காற்று மாசடைவது இல்லை. தொழிற்சாலைகள், வான ஊர்திகள், ரயில்கள், கப்பல்கள், கட்டிட பணிகள், குப்பை மற்றும் சருகுகளை எரித்தல், தில்லியில் அதிகரித்துள்ள வாகனங்களால் ஏற்படும் புகை ஆகியவற்றாலும் தில்லியில் காற்று மாசுபடுகிறது. காற்று மாசுபடுவதை பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் அரசு துறைகளின் ஒத்துழைப்புடன் சீரிய நடவடிக்கைகளால் தீபாவளியின்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இயலும். எனவே பட்டாசுகள் மீது தடை விதிக்க தேவையில்லை- என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.


