சென்னை: அந்தமானில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசிய போது கூறியதாவது…
தென்மேற்குப் பருவமழை தெற்கு அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று முதல் தொடங்கியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் தென் மேற்குப் பருவமழை, தெற்கு அரபிக் கடலின் சில பகுதிகள், குமரிக் கடல், மாலத்தீவு, தெற்கு வங்கக் கடல் பகுதியில் தொடங்க சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.
தென்மேற்குப் பருவமழை தொடங்குவதை முன்னிட்டு, குமரிக் கடல்ன் கேரளம், கர்நாடகக் கடற்கரைப் பகுதிகளில் லட்சத்தீவுப் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும். கடல் சீற்றத்துடன் காணப்படும்.
குமரிக்கடல், லட்சத்தீவுப் பகுதிகளிலும் கர்நாடகா கேரளா கடல் பகுதிகளிலும் வரும் மே 30ஆம் தேதி வரை மீன்வர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். தமிழக பகுதிகளில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், கடந்த 24 மணி நேரத்தில் அனேக இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருவையாறில் 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
அடுத்த இரண்டு நாட்களைப் பொறுத்த வரை தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும் வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
– என்று கூறினார் பாலசந்திரன்.