மகாராஷ்டிராவில் தனியார் பள்ளி கூடம் ஒன்றில் காலை நேர இறை வணக்கம் நடந்துள்ளது. இதில் 6ம் வகுப்பு மாணவன் ஒருவன் கொட்டாவி விட்டுள்ளான். தலைமை ஆசிரியை முன் கொண்டு நிறுத்தப்பட்ட அவனை அவர் கண்டித்ததுடன் அறைந்தும் உள்ளார்.
இதுபற்றி போலீசில் மாணவனின் தந்தை புகார் அளித்து உள்ளார். அதில், எனது மகனை ஏன் அறைந்தீர்கள்? என கேட்க பள்ளி கூடத்திற்கு சென்றேன். அவர்கள் தவறாக நடந்து கொண்டால் தண்டனை வழங்குவோம் என தலைமை ஆசிரியை பதில் அளித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் சில புத்தகங்களை மாணவன் கொண்டு செல்லவில்லை என்பதற்காக அவனை திட்டியதுடன், அடி விழும் என்றும் அவர் எச்சரிக்கை செய்துள்ளார் என தெரிவித்துள்ளார்.
இதனால் அச்சமடைந்த மாணவன் அடுத்த நாள் பள்ளி கூடத்திற்கு போக மறுத்து உள்ளான். தொடர்ந்து அவனை கட்டாயப்படுத்தி பள்ளிக்கு செல்ல கூறியதுடன் பள்ளி நிர்வாகத்திடம் தலைமை ஆசிரியை பற்றி அவனது தந்தை புகார் கூறியுள்ளார்.
இதனை அடுத்து பிரிவு 323ன் (துன்புறுத்துதல்) கீழ் மற்றும் சிறுவர் நீதி (குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


