அ.தி.மு.க-வில் உட்கட்சிப் பூசல் நிலவுவதாகவும், ஓபிஎஸ் முதல்வர் பதவியை நோக்கி காய் நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் தில்லி சென்று மத்திய அமைச்சர் மற்றும் பி.ஜே.பி தலைவர்களைச் சந்திப்பதன் பின்னணி குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.
பி.ஜே.பி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக, மக்களவையில் தெலுங்குதேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்து, அ.தி.மு.க வாக்களித்த நிலையில், தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ் தில்லி சென்று பி.ஜே.பி தலைவர்களைச் சந்தித்து இருப்பது பல்வேறு யூகங்களை கிளப்பி விட்டிருக்கின்றன.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை ஓ.பன்னீர் செல்வம் சந்திக்க இருந்தார். ஆனால், நிர்மலா சீதாராமன், ஓ.பி.எஸ்ஸை சந்திக்கவில்லை. தற்போது, பி.ஜே.பி தலைவர்கள் சிலரையும் ஓ.பி.எஸ் சந்தித்துப் பேசவுள்ளார். இத்தகவலை ஓ.பன்னீர் செல்வத்துக்கு நெருக்கமான அ.தி.மு.க நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். உண்மையில் ஓபிஎஸ்ஸின் தில்லி பயண பின்னணி என்ன என்பதுதான் இப்போதைய ஹாட் டாபிக்.