புது தில்லி : காங்கிரஸ் தலைவர் ராகுல் மீது மக்களவையில் பாஜக., சார்பில் பாஜக., எம்.பி., அனுராக் தாக்குர் மூலம் உரிமை மீறல் பிரச்னை கொண்டு வரப்பட்டது.
ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மீது ராகுல் கூறிய கருத்து தொடர்பாக ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக., உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இரு அவைகளும் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் ரபேல் விவகாரம் தொடர்பாக ராகுல் மீது பாஜக., உரிமை மீறல் பிரச்னை கொண்டு வந்துள்ளது. பா.ஜ., எம்.பி., அனுராக் தாகூர் இதை கொண்டு வந்துள்ளார்.
முன்னதாக, ரபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தவறான தகவலைத் தந்ததாக பிரதமர் மோடி மீது உரிமை மீறல் பிரச்னையைக் கொண்டு வந்தது காங்கிரஸ். இதே பிரச்னையைக் கிளப்பி இரு அவைகளிலும் காங்கிரஸ் அமளியில் ஈடுபட்டது.
இதனிடையே திருநங்கைகள் தொடர்பான மசோதா ஒன்று குரல் ஓட்டு மூலம் நிறைவேற்றப்பட்ட நிலையில், நாளை வரை அவை ஒத்திவைக்கப் பட்டது.