5ம் வகுப்பு படிக்கிறான்; பேர் எழுதத் தெரியலியே! : உயர் நீதிமன்றம் வேதனை!

Published:

தமிழகத்தில் ஆசிரியர்களின் பயிற்றுவிக்கும் தரம் மிக மோசமாக உள்ளதால், 5-ம் வகுப்பு மாணவர்களில் பலருக்கு தங்களது பெயரைக்கூட எழுதத் தெரியவில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் வேதனை தெரிவித்தார்.

திருச்சி எஸ்.வி.ஐ. கல்வியியல் கல்லூரி சென்னை உயர்நீதிமன்ற தாக்கல் செய்த மனுவில், ‘2007-ம் ஆண்டு 50 மாணவர்களை சேர்த்துக்கொள்ள அனுமதி பெற்று எங்கள் கல்லூரி தொடங்கப்பட்டது. பின்னர் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, கூடுதல் மாணவர்களை சேர்க்க அனுமதி கேட்டபோது, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தென்மண்டல இயக்குனர் அனுமதி மறுத்து உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் எந்திரத்தனமாக பி.எட், எம்.எட். படிப்புகளை நடத்துவதற்கு பல கல்வியியல் கல்லூரிகளுக்கு நாடு முழுவதும் அனுமதி வழங்கி வருவது உண்மை. இதனால் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள்கூட இல்லாமல், இதுபோன்ற கல்லூரிகள் நாடு முழுவதும் காளான்போல வளர்ந்து வருகின்றன.

இதில் மிகப்பெரிய கசப்பான உண்மை என்வென்றால், உள்கட்டமைப்பு வசதிகளே இல்லாத கல்லூரிகளுக்கு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அங்கீகாரம் வழங்குவது குறித்து தமிழக அரசு எந்த கவலையும் கொள்வதில்லை. அதனால் தமிழகத்தில் ஆசிரியர்களின் தரம் மிகமோசமாக உள்ளது. 5-ம் வகுப்பு மாணவர்களில் பலருக்கு தங்களது பெயரைக்கூட எழுத தெரியவில்லை. முறையான வகுப்புகள், உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத ‘லெட்டர் பேட்’ கல்லூரிகளில் பி.எட்., எம்.எட். பட்டத்தை ஆசிரியர்கள் பெறுவதால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

திறமையான, பண்பாற்றல் மிக்க ஆசிரியர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் மிகக்குறைவாக உள்ளது. பாடத்தை தெளிவாக மாணவர்களுக்கு நடத்தக்கூடிய தகுதிகூட ஆசிரியர்களிடம் இல்லை. அதனால் பிற மாநில மாணவர்களுடன், தமிழக மாணவர்களால் கல்வியில் போட்டிபோட முடியவில்லை. கல்வி என்பது வணிக மயமாகிவிட்டது.

எனவே, பொதுநலன் கருதி இந்த வழக்கில் டெல்லியில் உள்ள தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் இயக்குனர், தமிழக உயர் கல்வித்துறை செயலாளர், தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழக பதிவாளர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குனர் ஆகியோரை இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறேன். அவர்கள் பின்வரும் கேள்விகளுக்கு விரிவான பதிலை மனுவாக தாக்கல் செய்யவேண்டும்.

நாடு முழுவதும் ஆசிரியர் பட்டய பயிற்சி, பி.எட்., எம்.எட்., ஆகிய படிப்புகளை நடத்தும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், கல்வியியல் கல்லூரிகள் எத்தனை உள்ளன? தமிழகத்தில் எத்தனை உள்ளன? கடந்த 10 ஆண்டுகளில் இந்த பள்ளிகள், கல்லூரிகளில் இருந்து எத்தனை மாணவர்கள் பட்டம் பெற்றுள்ளனர்? தமிழகத்தில் எத்தனை பேர் பட்டம் பெற்றுள்ளனர்?

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

இதில் எத்தனை பேர் ஆசிரியர் வேலை கிடைக்காமல் காத்துக்கிடக்கின்றனர்? இந்தியாவிலும், தமிழகத்திலும் இதுபோன்ற கல்லூரிகள், பள்ளிகளில் இருந்து ஆண்டுக்கு எத்தனை மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர்? இந்தியாவிலும், தமிழகத்திலும் இந்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு உள்ளதா?

நாடு முழுவதும் எத்தனை ஆசிரியர்கள் தேவை என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் ஏதாவது ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதா? ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளாமல், ஆசிரியர் பள்ளிகள், கல்வியியல் கல்லூரிகளை தொடங்க தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அனுமதி வழங்கி வருகிறதா? தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் மற்றும் தமிழக கல்வித்துறையில் போதுமான ஊழியர்கள், அதிகாரிகள் உள்ளனரா?

இந்தியாவிலும், தமிழகத்திலும் கல்வியியல் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் எத்தனை இருக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளதா? இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் எத்தனை தேவை? தற்போது போதுமான எண்ணிக்கையில் உள்ளதா? இந்த கேள்விகளுக்கு 27-ந் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img