ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழாவை கோவிலுக்கு உள்ளேயே நடத்தவும் தங்கத்தேர் எடுக்கவும் அனுமதி கோரி தமிழக அரசுக்கு கோயில் நிர்வாகம் கடிதம் எழுதியுள்ளது
நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அதன் தாக்கமானது தமிழகத்திலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உயிரிழப்புகளும் ஏற்பட்டு வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது
இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் பூட்டப்பட்டன. இருப்பினும், 10 ஆயிரத்துக்கும் குறைவான வருமானம் உள்ள கோவில்களை மட்டும் திறக்கலாம் என்று அண்மையில் தமிழக அரசு அறிவித்தது.
இந்த நிலையில் ஊராட்சிகளில் உள்ள சிறு கோயில்கள் மற்றும் மசூதிகள், சர்ச்சுகள் திறக்கப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பெரிய கோயில்கள் அனைத்தும் பூட்டப்பட்டு மக்கள் வழிபடுவதற்கு தடை தொடர்கிறது.
இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில் நடைபெறும் புகழ்பெற்ற திருவிழாவான ஆடிப்பூர தேரோட்ட திருவிழா இந்த முறை நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இருப்பினும், ஸ்ரீவில்லிபுத்தூரில் வரும் 16ஆம் தேதி திருவிழா கொடியேற்றம் நடைபெறும் என்று தெரிகிறது. இதனால் ஆடிப்பூர திருவிழாவில் 10 முதல் 20 பேர் வரை மட்டுமே கலந்து கொண்டு பூஜைகளை செய்யவும் கோவிலுக்கு உள்ளேயே ஒன்பது நாள் திருவிழாவை நடத்தவும் 24ஆம் தேதி தங்கத்தேர் இழுக்கவும் அனுமதிக்கக் கோரி கோயில் நிர்வாகம் சார்பில் தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
முன்னதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் இந்த முறை விழாவை தடையில்லாமல் உள்ளேயே நடத்தவேண்டும் என்று அறநிலையத் துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.