
காட்பாடி அருகே, மாணவி ஒருவர் குழந்தையை பெற்றெடுத்தார். அதற்கு காரணமான, 18 வயது சிறுவன், வேலூர் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார்.
வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியை சேர்ந்த, 16 வயது மாணவி, அங்குள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். அவர் பிரசவத்துக்கு வேலூர் அரசு மருத்துவமனையில், நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டதாக, சமூக நலத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதிகாரிகள் சென்றபோது, மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
விசாரணையில், எதிர் வீட்டை சேர்ந்த, 18 வயது சிறுவனும், மாணவியும் காதலித்து வந்தனர். திருமணத்துக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்தாண்டு வீட்டை விட்டு வெளியேறி, திருமணம் செய்து கொண்டு வீடு திரும்பினர்.
தாலியை மறைத்து கொண்டு, திருமணம் நடக்காதது போல நாடகமாடி உள்ளனர். இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்ததால், மாணவி கர்ப்பமானார். குழந்தையை பெற்றுக் கொண்டால், இருவரையும் சேர்த்து வைப்பார்கள் என, அவர்கள் திட்டமிட்டு, குழந்தையை பெற்றது தெரிய வந்தது.
இருவரும் மைனர் என்பதாலும், இளம் வயதில் இன்னொரு கருத்தரிப்பு நடக்காமலிருக்கவும், அச்சிறுவனை அதிகாரிகள், வேலூர், அரசு சீர்த்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.


