கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் மதில் கிருஷ்ணன்.இவருக்கு வயது 40. தற்சமயம் இவர் தனது குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக தனது குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு சென்றிருந்தார். அதன் பிறகு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை திரும்பியுள்ளார்.
ரயில் தாம்பரம் ரெயில் நிலையம் வந்ததும், ரயிலில் இருந்து இறங்கிய பிறகு தான் தனது பையை ரயிலிலே தவற விட்டது மதில் கிருஷ்ணனுக்கு ஞாபகம் வந்தது.
உடனடியாக ரயில்வே பாதுகாப்புப்படை உதவி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் எழும்பூர் வந்ததும், அங்கு தயாராக இருந்த, இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான எழும்பூர் ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார் ரயிலில் ஏறி அவர் பயணம் செய்த எஸ்.3 பெட்டியில் சோதனை செய்து அவரது பையை மீட்டனர்.
அதில் இருந்த சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 30 பவுன் தங்க நகைகள் அனைத்தும் பத்திரமாக மீட்கப்பட்டு, மதில் கிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்டது.