தென்காசி அருகே தனக்குத்தானே இளைஞர் ஒருவர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள ஆவுடையாபுரம் பகுதியை சேர்ந்த கனிமாரியப்பன் என்பவரது மகன் மகாபிரபு அப்பகுதியில் லோடு ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வந்தார்.
வேலை நேரம் போக மற்ற நேரங்களில் செல்போனுடன் உறவாடும் பழக்கம் கொண்ட அவர் சமூகவலைத்தளங்களில் ஸ்டேட்டஸ்களை அடுக்குவது வழக்கம்.
அந்த வகையில் நாம் இறந்துப்போனால் எத்தனைப்பேர் நம் மீது அனுதாபம் படுகிறார்கள் என்ற எண்ணம் மகாபிரபுவுக்கு வந்துள்ளது.
உடனடியாக தான் மாரடைப்பால் மரணமடைந்தாக கூறி தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றை டிசைன் செய்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்துள்ளார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்களும், நண்பர்களும் தொடர்பு கொண்டு விசாரித்தப்போது தான் உயிரோடு இருப்பதாகவும், டைம்பாஸ் ஆகவில்லை என ஸ்டேட்டஸ் வைத்ததாகவும் கூற சில பாசக்கார உறவுகளும், நண்பர்களும் சரமாரி வசை பாடியதோடு தர்மஅடியும் கொடுத்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.