தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அனைத்து மாவட்டங்களிலும் பொதுப் போக்குவரத்து இயங்கவும், டாஸ்மாக் கடைகள், வழிபாட்டு தலங்களை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 5 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், வரும் 12 ஆம் தேதி காலை 6 மணி வரை மேலும் ஒரு வாரத்திற்கு கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
3 வகைகளாக பிரிக்காமல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் 5 ஆம் தேதி முதல் ஒரே மாதிரியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி ஹோட்டல்கள், பேக்கரிகள் டீக்கடைகளில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை 50 சதவீத அளவிற்கு வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிடவும் தேநீர் அருந்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 27 மாவட்டங்களில் மதுக்கடைகளுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது எஞ்சிய 11 மாவட்டங்களிலும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மதுக்கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் செயல்பாடுகள், இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் குளிர்சாதன வசதியின்றி 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க நடைமுறையில் இருந்த இ.பதிவு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அனைத்து வழிபாட்டு தலங்களும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ள போதிலும், குடமுழுக்கு மற்றும் திருவிழாக்களுக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப் பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் மால்கள் எனப்படும் வணிக வளாகங்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் நகைக் கடைகள், துணிக் கடைகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி தரப்பட்டுள்ளது.
ஜிம், உணவகம், விளையாட்டு வசதிகளுடன் கிளப்புகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஐ.டி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
லாட்ஜூகள், கெஸ்ட் ஹவுஸ் ஆகியவை செயல்படவும் அனுமதி வழங்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
கேளிக்கை, பொழுதுப்போக்கு பூங்காக்கள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி தரப்பட்டுள்ளது. எனினும், தண்ணீர் தொடர்பான விளையாட்டுகளுக்கு அனுமதி கிடையாது.
அருங்காட்சியகங்கள், பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ் வைப்பகங்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்…
இவற்றுக்கெல்லாம் அனுமதி கிடையாது!
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதிக்கப் படவில்லை.
மாநிலங்களுக்கு இடையே தனியார், அரசு பேருந்து போக்குவரத்துக்கும், தியேட்டர்கள் திறக்கவும் அனுமதி கிடையாது!
தமிழகத்தில் தியேட்டர்கள், மது பார்கள்,நீச்சல் குளங்கள், சமுதாய, அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி கிடையாது என அரசு அறிவித்துள்ளது.
பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி கிடையாது என அரசு அறிவித்துள்ளது. உயிரியல் பூங்காக்கள் உள்ளிட்ட வன பூங்காக்களைத் திறக்க அனுமதி கிடையாது.
மாநிலங்களுக்கு இடையே தனியார், அரசு பேருந்து போக்குவரத்துக்கும் அனுமதி தரப்படவில்லை.
மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர, சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை தொடர்கிறது.
திருமண நிகழ்வுகளில் 50 நபர்களுக்கும் இறுதிச் சடங்குகளில் 20 பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைகள், வணிக நிறுவனங்களில் நுழைவு வாயிலில் சானிடைசர் அவசியம் என்றும் கடைகளுக்கு வருவோரும், பணியாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
பொது இடங்களில் தனிநபர் இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும், அவசியமின்றி வீட்டை விட்டு வெளியில் வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.
மாஸ்க், தனிநபர் இடைவெளி உள்ளிட்டவற்றை மீறினால் அபராதம் விதிக்கும் நடைமுறை தொடரும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.