சென்னை:
நம் நாட்டில் சிஸ்டம் சரியில்லை, சிஸ்டம் கெட்டுப் போய் இருக்கு, சிஸ்டத்தை சரிசெய்தாகணும் என்று பேசிய நடிகர் ரஜினி காந்த், தனிக்கட்சி அரசியலில் ஈடுபடுவது குறித்து தீவிர ஆலோசனையில் உள்ளார். இந்நிலையில், போயஸ் கார்டனில் அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் சிஸ்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர், சிஸ்டம் சரியில்லை. தமிழகத்தில் இருந்துதான் சிஸ்டத்தை சரி செய்யத் தொடங்கவேண்டும் என்று கூறினார்.
தமிழகத்தில்தான் முதலில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்வேன் என்று கூறினார் ரஜினி காந்த். முன்னதாக, ரசிகர் சந்திப்பின் போது, ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவதை வெளிப்படையாக அறிவித்தார். கடந்த மே மாதமே, தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று தெரிவித்திருந்தார் ரஜினி.
கடந்த டிசம்பர் 31ஆம் தேதி ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், தான் அரசியலில் ஈடுபடுவது உறுதி என்றும், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தனிக்கட்சியாக போட்டியிடுவோம் என்றும், சட்டசபை தேர்தல் நேரத்தில் கட்சி துவங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
ரஜினி கட்சி தொடங்கியதும் விவசாயத்துக்கும், நதிநீர் இணைப்பு குறித்தும், தமிழக மீனவர்கள் பிரச்சினை நோக்கியும் அரசியல் நகர்வு இருக்கும் என்று கூறப் படுகிறது. நீர் நிலைகள் வரும் பாதையை முதலில் சரி செய்ய வேண்டும் என்பது ரஜினியின் பார்வை.
இந்நிலையில், போயஸ் தோட்டத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, தமிழகத்தில்தான் சிஸ்டம் சரியில்லை. தமிழகத்தில்தான் முதலில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும். கமலுடன் இணைந்து பணியாற்றுவது என்பது இப்போது தீர்மானிக்கப்படாதது. காலம் பதில் சொல்லும்.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும். 2.0 படத்தில் கிராபிக்ஸ் பணிகள் முடியவில்லை. எனவே, காலாவா அல்லது 2.0வா என்பதில் எது முதலில் வெளியாகும் என்பது இன்னும் 2 நாட்களில் தெரியும் என்று கூறினார் ரஜினி.