30 மா மரத்தின் இலைகளில் 1,330 திருக்குறள்களை 20 மணிநேரத்தில் எழுதி ஆசிரியை ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
தொட்டியம் அருகே கோடியம்பாளையம் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிபவர் அமுதா (48). இவர் பாண்டிச்சேரியில் இருந்து கூகுள் மீட் வாயிலாக நடத்தப்பட்ட உலக சாதனையாளர்கள் போட்டியில் பங்கேற்றார்.
இதில், 30 மா மரத்தின் இலைகளில் 1,330 திருக்குறள்களையும் 20 மணிநேரத்தில் எழுதி ஆசிரியை அமுதா சாதனை படைத்தார்.
இதையடுத்து, அவருக்கு பாண்டிச்சோரி ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் பொறுப்பாளர் வெங்கடேசன் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். தமிழறிஞர்களும் அவரை வெகுவாக பாராட்டினர்.
இதுகுறித்து ஆசிரியை அமுதா கூறுகையில், “என் தந்தை ஒரு தமிழாசிரியர். நான் எம்.எஸ்.சி. (விலங்கியல்) பி.எட் முடித்துள்ளேன். எனக்கு சிறு வயதில் இருந்தே எதாவது சாதிக்க வேண்டும் என்ற வேட்கை இருந்தது. ஆனால், அப்போதெல்லாம் கைக்கூடவில்லை.
ஓய்வு நேரத்தில் இலையில் திருக்குறளை விளையாட்டாக எழுதி பார்ப்பேன். இப்போது போட்டியில் கலந்து கொண்டு 20 மணிநேரம் தொடர்ச்சியாக எழுதி இருக்கிறேன். ஏற்கனவே, திருக்குறளை கவிதை வடிவில் எளியமுறையில் எழுதி பாராட்டு சான்றிதழ் பெற்றுள்ளேன்.
200-க்கும் மேற்பட்ட திருக்குறள் மனப்பாடமாக தெரியும். 1,330 திருக்குறளையும் மனப்பாடம் செய்ய பயிற்சி எடுத்து வருகிறேன் என்றார்.