வரும் ஜன.22 அன்று அயோத்தியில் ஸ்ரீராமர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் எனப்படும் பிராணப்பிரதிஷ்டை விழா நடைபெறவுள்ளது. 500 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட போராட்டங்கள் பல கடந்து தற்போது அயோத்தியில் ஸ்ரீராமரின் அவதாரத் தலத்தில் ராமர் கோயில் எழும்பி கும்பாபிஷேகம் காணவுள்ளது. இதை அடுத்து ஸ்ரீராம பக்தர்களுக்கு அழைப்புகள் அனுப்பப் பட்டு வருகின்றன.
இதில், ஸ்ரீராம ஜன்ம பூமி தீர்த்த க்ஷேத்ர அமைப்பு ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறது. அதாவது, ஆலய பிராணப்ரதிஷ்டை நிகழ்வு முடிந்த பின்னர், தங்களுக்கு வசதிப்படும் ஏதாவது ஒரு நாளில் ஆலயத்துக்கு வருகை தாருங்கள் என்பதுதான் அந்த அழைப்பு! இந்த அழைப்பிதழில் இடம்பெற்றுள்ள விவரங்கள்…
ஸ்ரீராம ஜென்மபூமி அழைப்பிதழ்
ஆன்மீக அன்பர்களுக்கு அன்பான வேண்டுகோள்…. தாய்மார்கள் மற்றும் சகோதர சகோதரிகளே…..
வரும் சோபகிருது ஆண்டு தை மாதம் 8ம் தேதி (22-1-2025) திங்கட்கிழமை மதியம் 12:20 மணிக்கு சுக்லபட்ச துவாதசி மிருகசீரிஷ் நட்சத்திர சுபயோக சுபதினத்தில் பிரபு ஸ்ரீராமனின் குழந்தை வடிவிலான விக்ரஹம் ஸ்ரீராம ஜன்மபூமியில் புதிதாக கட்டப்பட்ட ஆலயத்தில் ப்ராண பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதனால் அயோத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நிலை உருவாகி உள்ளது.
நிகழ்ச்சிகள் கோவிலை மையமாக வைத்து அமைய வேண்டும்.
தாங்களும் ப்ராண பிரதிஷ்டை அறிவிக்கப்பட்ட புனித நாளில் தங்கள் பகுதிகளில் உள்ள ஆலயங்களின் அருகில் உள்ள பக்தர்களை அழைத்து ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம மந்திரத்தை குறைந்தது 108 முறை சொல்வதோடு பஜனை, கீர்த்தனைகள், மேளதாளங்கள், சங்கொலி, மணியோசை தீபாராதனை செய்து ப்ரசாதம் வழங்கவும்.
மேலும் ஸ்ரீராம ஜென்மபூமி ப்ராண பிரதிஷ்டை வைபவம் நேரடியாக அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும் ஒளிபரப்பப் பட உள்ளது. நம் பகுதியில் தொலைக்காட்சி அல்லது எல்.இ.டி. திரை ஏற்பாடு செய்து ஆலய நிகழ்வுகளை சமுதாயத்திற்கு காண்பிக்கவும்.
ப்ராண பிரதிஷ்டை நாளன்று மாலை சூரிய அஸ்தமனத்திற்கு முன்பாக நமது வீடுகளில் திருக்கார்த்திகை போன்று தீபம் ஏற்றி கொண்டாட வேண்டும்.
ப்ராண பிரதிஷ்டை நிறைவுற்ற பின்பு தங்களுக்கு வசதியான நாளில் அயோத்திக்கு வருகை புரிந்து குழந்தை வடிவிலான ஸ்ரீராமபிரானை வழிபட்டு அனுக்ரஹம் பெற வேண்டுகிறோம்.
அன்புடன்
ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர டிரஸ்ட், அயோத்தி
- ஆலயம் பாரம்பர்யமிக்க அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
- ஆலய நீளம் (கிழக்கு மேற்காக) 390 அடி. அகலம் 250 அடி உயரம் 161 அடி.
- மூன்று தளங்களாக ஆலயம் அமைந்துள்ளது. ஒவ்வொரு தளமும் 20 அடி உயரமுடையது. மொத்தம் 392 தூண்கள், 44 வாசல்கள்.
- தரை தளமான கர்ப்பக்ரஹத்தில் பிரபு ஸ்ரீராமபிரானின் குழந்தை வடிவமும், முதல் தளத்தில் ஸ்ரீராமபிரானின் பட்டாபிஷேக மண்டபமும் அமைய உள்ளது.
- மொத்தம் 5 மண்டபங்கள். நாட்டிய மண்டபம், ரங்க மண்டபம். தரிசன மண்டபம், ப்ரார்த்தனா மண்டபம், கீர்த்தனை மண்டபம்.
- தூண்களில் இறைவன் மற்றும் நாட்டிய மாந்தர்களின் சிலைகள்,
- நுழைவுவாயில் முன்பு 32 படிகள் (உயரம் 16.5 அடி ஏறி பிரதான நுழைவாயிலை அடையலாம்.
- மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோருக்கு ரேம்ப் மற்றும் லிப்ட் வசதிகள்.
- நான்கு பக்கங்களிலும் கோட்டைச் சுவர்கள் 732 மீ. நீளம், 4.25 மீ. அகலம், கோட்டையின் நான்கு மூலைகளில் முறையே சூரியன். சிவன். கணபதி, தேவி பகவதி ஆகியோருக்கான ஆலயங்கள். கோட்டையின் தெற்கு முகமாக ஹனுமானும், வடக்கு முகத்தில் அன்னபூரணி ஆலயங்கள்.
- ஆலயத்தின் தென்பகுதியில் பழமையான சீதை கிணறு உள்ளது.
- கோட்டையின் வெளியே தென்திசையில் வால்மீகி மகரிஷி, வசிஷ்ட மகரிஷி, விஸ்வாமித்ர மகரிஷி. அகஸ்திய மகரிஷி, குகன், சபரிமாதா மற்றும் தேவி அகல்யாவிற்கான ஆலயங்கள்.
- தென்மேற்கில் குபேரன் குடிலில் உள்ள சிவாலய புனர்பிரதிஷ்டை மற்றும் ராமபக்த ஜடாயுவின் பிரதிஷ்டைகள்.