
தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.
தமிழக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் வகித்து வந்த துறைகள் பிற அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பாக அளிக்கப் பட்டுள்ளன. அமைச்சர்கள் சிவசங்கர், ராஜகண்ணப்பன், முத்துசாமிக்கு கூடுதல் இலாகா ஒதுககீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
சட்டமன்றத்தில் ஆளுநரை ஆபாசமாகவும் அசிங்கமாகவும் சைகை காட்டி போயா என்று சொன்ன பொன்முடி தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். ஒரு கூட்டத்தில், பெண்கள் குறித்தும், சைவம், வைணவம் பற்றியும் அருவருப்பான முறையில் பேசினார். இதன்மூலம், பொதுமக்களின் கடுமையான அதிருப்திக்கு ஆளானார். அவருடைய பேச்சை திமுக.,வின் மகளிர் நிர்வாகிகளும் கூட்டணிக் கட்சியினருமே கண்டித்தனர். எதிர்க்கட்சிகள் பெரும் அரசியலை முன்னெடுத்தன.
அவர் மீதான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, கடுமையான கண்டனம் தெரிவித்தார். பொன்முடி மீது தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கவும் தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில் தான் பொன்முடியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
இன்னொரு அமைச்சரான செந்தில் பாலாஜி, அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உச்ச நீதிமன்றத்தின் கடுமையான கண்டனத்துக்கு ஆளாகியுள்ளார். அவருக்கு அமைச்சர் பதவி முக்கியமா, ஜாமின் முக்கியமா என்று கடந்த விசாரணையின் போது நீதிபதி கேள்வி எழுப்பினார். இது குறித்து முடிவு செய்து ஏப்.28ஆம் தேதிக்குள் தெரிவிக்கும்படி உச்ச நீதிமன்றம் கெடு விதித்தது.
இத்தகைய சூழ்நிலையில் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடியின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.
செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் விலகலை அடுத்து, அமைச்சர்கள் சிவசங்கர், ராஜகண்ணப்பன், முத்துசாமிக்கு கூடுதல் இலாகா ஒதுககீடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு, செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பொன்முடி வகித்து வந்த வனம் மற்றும் காதித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.





