சபரிமலை நிறைபுத்தரி பூஜை நெற்கதிர் ஒப்படைக்கும் நிகழ்வுக்கு தென்காசி ஹரிஹரன் தேர்வு!

Published:

hariharan tenkasi - 2026

சபரிமலை நிறைபுத்தரிசி நெற்கதிர்கள் அச்சன்கோவிலில் இருந்து சபரிமலைக்கு ஊர்வலமாகக் கொண்டு வர அச்சன்கோவில் திரு ஆபரணப்பெட்டி தமிழக பொறுப்பாளர் ஹரிஹரன் குருசாமி பெயரில் தேவசம்போர்டு உத்தரவு வழங்கியுள்ளது.

கேரளாவில் விளைந்த நெற்கதிர்களை கோவிலில் வைத்து பூஜை செய்த பின்னரே அறுவடையை தொடங்குவார்கள். இதற்கு நிறை புத்தரிசி பூஜை என்று பெயர்.

இந்த நிறை புத்தரிசி பூஜை ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நடைபெறும். இந்த பூஜை நடத்துவதற்கான நாள் நேரம் ஆகியவற்றை திருவனந்தபுரம் அரண்மனையில் ஜோதிடர்கள் குறித்துச் சொல்கின்றனர். இந்த ஆண்டு வரும் ஜூலை 30ல் நாள் குறிக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் இப்படி நடக்கும் நிறைபுத்தரிசி பூஜை விசேஷமானது.

இதற்காக நெற்கதிர்கள் தென்காசி மாவட்டம் செங்கோட்டைக்கு அருகில் உள்ள அச்சன்கோவிலில் இருந்து கொண்டு செல்லப்படும். இவ்வாறு நெற்கதிர்கள் கொண்டு செல்லப்படும் நிகழ்ச்சிக்கு நிறை புத்தரி கோஷ யாத்திரை என்று பெயர். செங்கோட்டைக்கு அருகில் உள்ள அச்சன்கோவிலில் இருந்து ஆண்டுதோறும் பல்வேறு கோயில்களுக்கு நெற்கதிர்கள் கொண்டு செல்லப்படும்.

இந்த ஆண்டு இந்த வைபவம் வரும் 29ஆம் தேதி நடக்க உள்ளது. இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் திருவாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பி.எஸ். பிரசாந்த்துடன் அச்சன்கோவில் திருஆபரண கமிட்டி தலைவர் ஏ.சி.எஸ்.ஜி.ஹரிஹரன் குருசாமி நிர்வாகிகள் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

இதன்படி, சபரிமலைக்கான நிறைபுத்தரி கோஷயாத்திரை அச்சன்கோவிலில் இருந்து வரும் 29ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு தேவசம்போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் தலைமையில் தொடங்குகிறது. அங்கிருந்து ஆரியங்காவு ஸ்ரீதர்மசாஸ்தா திருக்கோவில், புனலூர் கிருஷ்ணன் கோவில், உள்ளிட்ட 21 கோவில்களுக்கு ஊர்வலமாக சென்று அந்தந்த கோவிலுக்கான நிறைபுத்தரி நெற்கதிர்களை ஒப்படைத்து விட்டு பம்பையை அடைகிறது

இந்நிலையில், சபரிமலை நிறைபுத்தரி பூஜைக்கான நெற்கதிர்கள் கோஷ யாத்திரையாக அச்சன்கோவில் திருஆபரணப் பெட்டி கமிட்டி தமிழக பொறுப்பாளர் தென்காசி ACS ஹரிஹரன் குருசாமி மற்றும் கமிட்டியினர் தேவசம் போர்டு அதிகாரிகள் மேற்பார்வையில் சன்னிதானம் கொண்டு சென்று ஒப்படைக்கும் உத்தரவுக் கடிதத்தை தேவசம் போர்டு வழங்கியது.

தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்படுவது இதுவே முதல் முறை. நிறை புத்தரிசி பூஜை கேரளாவில் குறிப்பாக சபரிமலையில் அறுவடை காலம் தொட்டு நடக்கும் பூஜைகளில் மிகச் சிறப்பானது. விளைந்த நெற்கதிர்களை அறுவடைக்கு முன் சுவாமிக்கு படைப்பது இதன் தாத்பரியம்!

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img