ஸ்ரீரங்கம் தொகுதியில் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதாவின் பேச்சுகளை பதிவு செய்து, காணொளி, எல்சிடி திரைகள் மூலம் தொகுதி மூழுவதும் ஒளிபரப்பு செய்து பிரசாரத்தில் ஈடுபட அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவரின் முதல்வர் பதவியும், ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. பதவியும் பறிபோனது. இதன் காரணமாக, ஸ்ரீரங்கத்தில் வரும் பிப்ரவரி மாதம் 13ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்கியுள்ளது. ஸ்ரீரங்கம் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட இயலாத சூழலில், அத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா இருப்பதால், இவ்வாறு திட்டமிட்டுள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் உடல் நலம் குன்றியிருந்தபோது அவரது முகத்தையும், இரட்டை விரல்களை உயர்த்திக் காட்டுவதையும், மருத்துவமனையில் அவர் உணவு உண்ணும் காட்சிகளையும் ஊர் ஊராக வீடியோவில் காட்டியே பிரசாரம் செய்தது போல் இம்முறை ஜெயலலிதாவின் பேச்சுகளை திரையிட திட்டமிட்டுள்ளனர்.
ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா காணொளி மூலம் பிரசாரம்: அதிமுக திட்டம்?
Popular Categories


