மும்பை: இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் 1976ல் இந்திரா காந்தியால் சேர்க்கப்பட்ட மத சார்பின்மை, சோஷலிஸம் என்ற வார்த்தைகள் தற்போது குடியரசு தினத்தை ஒட்டி வெளியான அரசியலமைப்புச் சட்ட முகவுரை குறித்த விளம்பரத்தில் விடுபட்டு வெளியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த சர்ச்சைகளில் இருந்து விலகியிருக்க ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்ட முகவுரையில் இருந்து மதச்சார்பின்மை, சோஷலிஸம் ஆகிய வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியுள்ளது. அக்கட்சியின் எம்.பி., சஞ்சத் ராவுத் இந்தக் கருத்தை வலியுறுத்திப் பேசியுள்ளார். இந்நிலையில், இந்த சர்ச்சைகளில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கருதுகிறது. இது குறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறியபோது… “இந்த விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் கருத்து தகுதியானதாக இருக்கும் என்று எங்களுக்குத் தோன்றவில்லை. இந்த விவகாரத்தில் சர்ச்சையைக் கிளப்பி விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள், சரியான நோக்கத்துடனும் ஆழந்த விவரங்களோடும் ஈடுபடுகிறார்களா என்று எங்களுக்குத் தோன்றவில்லை. அப்படி இருக்கும் போது, இந்த சூழ்நிலையில் எதுவும் பேசாமல் இருப்பதுதான் சரியானது என்று நாங்கள் கருதுகிறோம்” என்று கூறியுள்ளார். சிவசேனா எம்பி., சஞ்சய் ராவுத் இது குறித்துக் கூறிய போது, “இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு கிடையாது. பாகிஸ்தான் இஸ்லாம் நாடு என்று இருக்கும்போது, இந்தியா ஹிந்து நாடாகத்தான் இருக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இது ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் கூறும் ஹிந்து ராஷ்டிரத்தை ஒட்டி வந்தாலும், சிவசேனாவின் இந்த வார்த்தைக் கட்டுமானத்தை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஏற்கவில்லை. தாங்கள் கூறும் ஹிந்து ராஷ்ட்ரம் என்ற கொள்கை சிவசேனாவின் கருத்தில் இருந்து வேறுபட்டது என்று கூறுகிறது. இது குறித்து ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் கூறியபோது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மதச்சார்பின்மை என்ற வார்த்தை புகுத்தப்படுவதற்கு முன்பும் பின்பும் ஆர்.எஸ்.எஸ் இதையே வலியுறுத்தி வருகிறது. அனைத்து மதங்களின் பாலும் இந்திய சமூகத்துக்கு ஒரு சகிப்புத் தன்மை இருந்து வருகிறது. சிவசேனா என்ன கூறுகிறதோ அது மிகவும் தீவிரமாக விவாதிக்கப் பட வேண்டிய ஒன்றல்ல. எனவே அதனை நாங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்றார். இந்நிலையில், மோடி அரசை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தும் நடவடிக்கையில் சிவசேனா ஈடுபட்டுள்ளதாகவே கருத இடமிருப்பதாக ஆர்.எஸ்.எஸ் கூறுகிறது. ஆர்.எஸ்.எஸ்.ஸின் இந்தக் கருத்தானது, நரேந்திர மோடி அரசுக்கு உள்ள கவுரவத்தை இந்த விவாதமானது குலைத்து விடும் என்று தெரிவிப்பதாகவே உள்ளது. இந்நிலையில், அரசின் விளக்கத்தை ஆர்.எஸ்.எஸ். மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
To Read this news article in other Bharathiya Languages
மதசார்பின்மை, சோஷலிச வார்த்தைகள் விவகாரம்: சர்ச்சையிலிருந்து விலகியிருக்க ஆர்.எஸ்.எஸ். முடிவு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari