திமுக தலைவர் கருணாநிதியின் 95 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சீபுரம் வடக்கு மாவட்டத்தில் இன்று 7 இடங்களில் உதயநிதி ஸ்டாலின் கொடி ஏற்றவுள்ளார்.
கருணாநிதியின் பேரன், உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் சினிமா துறையில் கவனம் ஈர்த்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்புதான் அவருக்கு முரசொலி பத்திரிகையின் நிர்வாக இயக்குனர் பொறுப்பு வழங்கப்பட்டது.
ஆனாலும் கட்சியில் எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. இருந்தும் , காவிரி பிரச்சனைக்காக போராட்டம், பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் என பல்வேறு போராட்டங்களில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். கட்சி நிகழ்ச்சியிலும் மேடை ஏறி பேசி வந்தார்.
திமுக தலைவர் கருணாநிதியின் 95 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அக்கட்சியினர் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று குன்றத்தூர் ஒன்றியம் வஞ்சுவாஞ்சேரி, மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில், திருத்தேரி, செங்கல்பட்டு, தையூர், நாவலூர் ஆகிய 7 இடங்களில் உதயநிதி ஸ்டாலின் திமுக கொடியை ஏற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியில் எந்த பதவியிலும் இல்லாதவர் கட்சி கொடியை ஏற்றுவது இதுவே முதல்முறை என்பதால் அக்கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.