விஸ்வரூபம் படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் கமல்ஹாசன் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2008-ம் ஆண்டு மர்மயோகி என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு பிரமிட் சாய்மீரா நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 100 கோடி ரூபாய் செலவில் தயாரிக்க திட்டமிடப்பட்ட இந்த படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக 6.90 கோடி ரூபாயும், படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிப்பதற்காக கமல்ஹாசனுக்கு 4 கோடி ரூபாயும் வழங்கப்பட்டது. ஆனால் மர்மயோகி படத்தை தயாரிக்காமல் ‘உன்னைபோல் ஒருவன்’ படத்திற்கு பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த ரூ6.90 கோடியை கேட்டு சாய்மீரா நிறுவனத்தால் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், விஸ்வரூபம் 2 படத்தை ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில், விஸ்வரூபம் 2 படத்தை தயாரிக்க பலரிடம் கடன் வாங்கியுள்ள நிலையில், மர்மயோகி படத்திற்கு கொடுத்த சம்பளம் ரூ4 கோடியை வட்டியுடன் சேர்த்து ரூ5.44 கோடியை கொடுக்காமல் விஸ்வரூபம் 2 படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என பிரமிட் சாய்மீரா நிறுவனம் தொடுத்த வழக்கில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரனைக்கு வந்தது. அப்போது கமல்ஹாசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த மனு மீது விளக்கமளிக்க கால அவகாசம் அளிக்க வேண்டும் எனக் கோரினார். இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் மற்றும் ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் இன்று பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.