சிதம்பரம்: சிதம்பரத்தில் திருடன் என நினைத்து பொதுமக்களால் தாக்கப்பட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் காசுகடைத் தெருவில் 30 வயது மதிக்கத்தக்க வட மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், நேற்று நீண்ட நேரமாக அங்கும் இங்குமாக சுற்றி வந்தார். மேலும், ஒவ்வொரு வீட்டின் முன் நிற்பதும், பின்னர் செல்வதுமாக இருந்த அந்த நபர், திடீரென அந்த தெருவில் நின்றிருந்த ஒரு காரின் கதவை பிடித்து இழுத்துள்ளார். இதைப் பார்த்தவர்கள் கார் உரிமையாளரிடம் கூறினர்.
ஆத்திரமடைந்த அவர், வடமாநில இளைஞரைத் தாக்கினார். அந்த நபர் இந்தியில் பேசியது புரியாத நிலையில், அங்கே கூடிய பொதுமக்களும் சரமாரியாகத் தாக்கினர். கட்டி வைத்தும் உதைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த இளைஞரை மீட்டு, சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அந்த நபர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த டி.எஸ்.பி., பாண்டியன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். சிதம்பரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து, இறந்த இளைஞர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறித்தும், அவரை அடித்துக் கொலை செய்தது தொடர்பாக 10க்கும் மேற்பட்டோரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால், அப்பகுதி மக்கள் ஏராளமானோர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
[videopress 4F5qoYkV]