சென்னை: 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், இது வெற்றிகரமான தோல்வி என்றும், தற்போது வாக்கு இயந்திரம் மீது எதிர்க் கட்சிகளுக்கு நம்பிக்கை உள்ளதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
5 மாநில தேர்தல் முடிவுகள் நிலவரம் வரத் தொடங்கிய போது, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் தமிழிசை சௌந்தர்ராஜன். அப்போது அவர், இது வெற்றிகரமான தோல்விதான். தேர்தல் முடிவுகள் மாநில பிரச்னைகளின் எதிராலியே. பாஜக., மோசமான தோல்வி அடையவில்லை. அனைத்து தொகுதிகளிலும் கடும் போட்டி கொடுத்துள்ளோம். பாஜக.,விற்கு எதிரான கூட்டணி வெற்றி பெறாது.
இழுபறி ஏற்பட்டுள்ள இடங்களில் பாஜக., வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. கூட்டணி வெற்றி பெறும் என்பதை தெலங்கானா முடிவுகள் தோற்கடித்துள்ளது. நேற்று நடந்த கூட்டணிக் கூட்டம் எந்த விதத்திலும் வெற்றியை தராது என்பதை தெலங்கானா நிரூபித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் மாநில பிரச்னையில்தான் பாஜக., தோல்வியடைந்துள்ளது. பாஜக.,வின் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியின் ஆரம்பமாகவே இதனை எடுத்து கொள்ள முடியும்.
தற்போது வாக்கு இயந்திரம் மீது எதிர்க்கட்சிகளும் நம்பிக்கை உள்ளதா? அவர்கள் வெற்றி பெற்றால் வாக்கு எந்திரம் மீது நம்பிக்கை எனவும், நாங்கள் வெற்றி பெற்றால் இயந்திரம் கோளாறு எனவும் தவறான குற்றச்சாட்டை கூறுகின்றனர். வாக்கு இயந்திரத்தை பயன்படுத்தி வெற்றி பெற்றோம் என பாஜக.,வின் வெற்றியை கொச்சைப் படுத்தியதற்காக எதிர்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் தமிழிசை.