சேலம்: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அம்மாவின் உண்மை விசுவாசி அவர் திமுகவில் இணைய வாய்ப்பில்லை என சேலத்தில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் செய்தியாளர்களிடம் கூறினார்.
நாங்கள் விலகியதாக பொய்யான தகவலை பரப்பி அமமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த அதிமுகவினர் முயற்சி செய்கின்றனர் என குற்றம்சாட்டினார் …
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் சேலத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்காக நேற்று மாலை சேலத்திற்கு வருகை தந்தார். அவருக்கு சேலம் ஏவிஆர் ரவுண்டானாவில் அமமுகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார், அப்போது முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜியும் நீங்களும் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைய உள்ளதாக சில நாளிதழ்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருவதாக எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், இது முற்றிலும் தவறான தகவல் எனவும் அமமுகவிலிருந்து நாங்கள் விலகுவதாக இதுவரை நாங்கள் யாரும் தெரிவிக்கவில்லை,
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வளர்ச்சியை பொறுக்காத அதிமுகவினர் அமமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தவே இப்பேர்ப்பட்ட பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக தெரிவித்தார்.
மேலும் செந்தில் பாலாஜியும் நானும் அம்மாவின் உண்மை விசுவாசிகள் ஆதலால் என்றும் சின்னம்மா வழியில் அமமுகவில் நீடிப்போம் எனவும் தெரிவித்தார்.
மேலும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழக மக்களை பாதிக்கக்கூடிய எந்த திட்டத்தையும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அனுமதித்ததே இல்லை. ஆனால் அம்மா வழியில் செயல்படுவதாகவும் மத்திய அரசுடன் இணக்கமாக உள்ளதாகவும் கூறும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேகதாது அணை விவகாரத்தில் தமிழக மக்களின் நலனுக்காக கர்நாடகாவில் புதிய அணையை கட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்காமல் மத்திய அரசு என்ன நினைக்கிறதோ அதையே அவர் செய்து வருவதாக குற்றம் சாட்டினார்.
மேலும் தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த எடப்பாடி அரசு முன்வராது அப்படி வந்தால் அவர்கள் தோற்று விடுவார்கள் அனைத்து தொகுதிகளிலும் அமமுக வெற்றி பெறும் என்பது அவர்களுக்கே தெரியும் என அவர் தெரிவித்தார்.