கரூர் கோவை ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் பா.ம.க கட்சியின் மகளிரணி கூட்டம் மாவட்ட அளவில் நடைபெற்றது. மாவட்ட மகளிரணி செயலாளர் சந்திரா வரதராஜன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு பா.ம.க கரூர் மாவட்ட பொருளாளர் பாக்கியலெட்சுமி ஆறுமுகம் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய பா.ம.க மாநில துணை பொதுச்செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் கூறியதாவது.,
நமது கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலே மதுவிற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறது. நாம் குடியை நிறுத்து, குடிப்பழக்கம் உயிரை கொல்லும் என வலியுறுத்தி பல்வேறு அறப்போராட்டங்களை நடத்தினால் தமிழக அரசு நாளுக்கு நாள் குடியுங்கள், குடியுங்கள் என டாஸ்மாக் கடைகளை அதிகரித்து வருகிறது. இதனால் தாலிக்கு தங்கம் கொடுக்கும் அ.தி.மு.க அரசே தாலியை அறுக்கிறது. எனவே மதுவினால் மாண்டவர்கள் அதிகமானோர். ஆதலால் குடியை நிறுத்தவும், குடிப்பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நமது கட்சி இன்று வரை பல்வேறு போராட்டங்களை நடத்தினாலும் அரசு செவிடன் காதில் ஊதும் சங்கு போல தான் உள்ளது. ஆனால் வரும் 2016 சட்டமன்ற தேர்தலின் பா.ம.க முதல்வர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாசு மதுவிற்கு எதிரான பல்வேறு அறப்போராட்டங்களை நடத்தி வருகிறார். எனவே கரூரில் வரும் மே மாதம் நடைபெற உள்ள மதுஒழிப்பு போராட்டத்தில் பா.ம.க முதல்வர் வேட்பாளர் அன்புமணி இராமதாசு கலந்து கொண்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார்.
ஆகவே இந்த அறப்போராட்டத்தில் பா.ம.க மகளிரணியினரை சார்ந்த சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோரை அழைத்து வந்து மகளிரணியினரின் பலத்தை நிருபிக்க வேண்டும் என சூளுரை விடுத்தார். மேலும் இந்த அறப்போராட்டத்தை தொடர்ந்து மதுவை ஒழிக்க மகளிரணியினர் திண்ணை பிரச்சாரம் மூலம் ஈடுபட வேண்டும். மகளிரணியினர் தங்களது முழு போராட்டத்தை மதுவுக்கு எதிராக அற வழியில் பாடுபட்டு ஐயாவின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் இக்கூட்டத்தில் சமூக நீதி பேரவை மாநில துணை செயலாளர் வழக்கறிஞர் செல்வராஜ், மாவட்ட செயலாளர் ந.மு.விஜயகுமார், ஒன்றிய செயலாளர்கள் தாந்தோன்றி ராஜா, கடவூர் பழனிச்சாமி, க.பரமத்தி சந்திரன், அரவக்குறிச்சி ரமேஷ், கரூர் கிழக்கு முத்துசாமி, கரூர் மேற்கு மூர்த்தி, கிருஷ்ணராயபுரம் பூவேந்திரன், கிருஷ்ணராயபுரம் நகர செயலாளர் முருகன், மாவட்ட நிர்வாகிகள் வாங்கல் சதீஸ், சண்முகம், கண்ணன், அறிவழகன் உள்ளிட்ட நிர்வாகிகளும், ஏராளமான மகளிரணியினரும் கலந்து கொண்டனர். முடிவில் கரூர் நகர செயலாளர் ராக்கி முருகேசன் நன்றி கூறினார்.
அன்புமணியின் மது ஒழிப்பு போராட்டம்: 1 லட்சம் பேர் கலந்து கொள்ள உறுதி
Published:

