திரிபோலி: தலை துண்டித்துப் படுகொலை செய்ய எத்தியோப்பிய கிறிஸ்தவர்கள் அழைத்து வரப்படும் காட்சி ஒன்றை பதிவு செய்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். லிபியாவில் சிறைப்பிடிக்கப்பட்ட எத்தியோப்பிய கிறிஸ்தவர்கள் 28 பேரை ஐ.எஸ். பயங்கரவாதிகள் படுகொலை செய்யும் வீடியோ பதிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் 12 பேரின் தலைகள் துண்டிக்கப்பட்டன. மற்றொரு இடத்தில் 16 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டதாகக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இவை எப்போது நிகழ்ந்தன என்பது குறித்த விவரம் இல்லாவிடினும், 29 நிமிடம் ஓடக் கூடிய இந்த விடியோவில், முகமூடியிட்ட பயங்கரவாதிகள் பிணைக் கைதிகளைப் பிடித்து வைத்திருக்கும் காட்சியும், “எத்தியோப்பிய சர்ச்சைச் சேர்ந்த எதிரிகள்’ என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளன. ஐ.எஸ்.ஐ.எஸ்ஸின் கொடி, சின்னம் போன்றவை அந்த விடியோ பதிவில் உள்ளன. அதில், முஸ்லிம்களாக மதம் மாறாத கிறிஸ்தவர்களை மிரட்டுகிறார் முகமூடி அணிந்த நபர். எகிப்தைச் சேர்ந்த 21 கிறிஸ்துவர்களின் தலைகளை லிபியா கடற்பகுதியில் துண்டித்துப் படுகொலை செய்யும் விடியோவை கடந்த பிப்ரவரியில் வெளியிட்ட ஐ.எஸ். இயக்கத்தினர், தற்போது எத்தியோப்பியாவைச் சேர்ந்த 28 கிறிஸ்தவர்களைப் படுகொலை செய்து விடியோ வெளியிட்டுள்ளனர். இதையடுத்து, மேற்கு ஆசிய நாடுகளில் உள்ள கிறிஸ்துவர்களிடையே அச்சம் எழுந்துள்ளது.
ஐஎஸ் பயங்கரவாதிகள் வெறிச்செயல்: 28 கிறிஸ்துவர்கள் படுகொலை
Popular Categories


