தூத்துக்குடி: திமுக தலைவர் முக ஸ்டாலின் பாஜக.,வுடனும் பேசிவருகிறார் என்று தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தூத்துக்குடி தொகுதியில் நிச்சயம் தாமரைதான் மலரும். தப்புக்கணக்கு போடுவதற்கு தமிழகத்தில் ஒரு தலைவர் உண்டென்றால் அது ஸ்டாலின் தான்! பாஜக.,வுடன் பேச மு.க.ஸ்டாலின் முயற்சித்து வருவது உண்மை என்றார்.
நேற்று தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ், மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசியது குறித்து கருத்து தெரிவித்த தமிழிசை, மு.க.ஸ்டாலின் ராகுலை முதலில் பிரதமர் எனத் தெரிவித்தார். இந்நிலையில், நேற்று சந்திரசேகரராவிடம் பேசினார்! மறுபுறம் மோடியுடனும் பேசுகிறார் என்று கூறினார்.
மேலும், மு.க.ஸ்டாலின் தான் குழப்பத்தில் உள்ளார்; ஆனால், பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்று கூறிய தமிழிசை, தேர்தல் நேரத்தில் சோதனைகள் நடத்தப்படுவது வாடிக்கைதான் என்று கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இன்று முக ஸ்டாலின் தூத்துக்குடி செல்கிறார். இந்நிலையில், இன்று காலை முக ஸ்டாலின் தங்க உள்ள விடுதி அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். ஸ்டாலினின் பிரச்சார வாகனத்திலும் சோதனை மேற்கொண்டனர்.
இதனிடையே பாஜக,வுடன் முக ஸ்டாலின் பேசிவருவதாக தமிழசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ள கருத்துக்கு, திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழிசை சவுந்தரராஜன் உளறி வருவதாக அவர் கூறியுள்ளார்.