தொட்டில் சேலை கழுத்தில் இறுக்கி 11 வயது சிறுமி உயிரிழந்த சோகம்!

Published:

aswathi girl - 2026

தொட்டில் சேலை கழுத்தில் இறுக்கி 11 வயதான சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த வடிவேல் என்பவரின் மகள் அஸ்வதி. 11 வயதான அவர் அங்குள்ள பள்ளியில் 5-ஆம் வகுப்பு முடித்து ஆறாம் வகுப்புக்குச் செல்கிறார். இவர் கோடை விடுமுறைக்காக சென்னை ஐ.சி.எப். ரயில்வே காலனியில் உள்ள தனது மாமா வினோத்குமார் வீட்டுக்கு வந்திருந்தார்.

ரயில்வே டிக்கெட் பரிசோதகரான வினோத்குமாரின் மகன் யஸ்வந்த் காய்ச்சல் காரணமாக பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார். எனவே வினோத்குமாரின் தாயார் ஜானகி மருத்துவமனைக்குச் சென்றிருந்தார். அப்போது வீட்டில் தனியாக இருந்த சிறுமி அஸ்வதி, வீட்டை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு விளையாடினாராம்.

அப்போது வீட்டுக்குள் கட்டப்பட்டிருந்த தொட்டில் சேலையில் அமர்ந்து, சிறுமி ஊஞ்சல் விளையாடியதாகத் தெரிகிறது. இதில் கழுத்து இறுக்கப் பட்டு, சிறுமி அஸ்வதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பணி முடிந்து வீட்டுக்குத் திரும்பிய சிறுமியின் சித்தப்பா ஈஸ்வரன், கதவைத் திறக்குமாறு தட்டியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளார். உள்ளே சிறுமி தொட்டில் கட்டிய சேலையில், கழுத்து இறுகப் பட்டு, அசைவற்ற நிலையில் இருந்திருக்கிறார். இதனால் பதறிய ஈஸ்வரன் உடனே கதவை உடைத்துத் திறந்து, சிறுமியை மீட்டு பெரம்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். அங்கே சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவள் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

இதுகுறித்து ஐ.சி.எப். போலீசார் விசாரணை நடத்தினர். சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் ரயில்வே காலனி குடியிருப்பில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தங்களது மகளின் மரணச் செய்தி கேட்டு அலறியடித்து கிருஷ்ணகிரியில் இருந்து விரைந்து வந்த அஸ்வதியின் பெற்றோர், மகளின் உடலைப் பார்த்து கதறி அழுதது அங்கிருந்தவர்களை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியது.

Related articles

Recent articles

spot_img