தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே ஸ்ரீலட்சுமிநரசிம்ம சுவாமி திருக்கோயில் திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்துள்ள அளேபுரத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில்! இந்தக் கோயிலில் தேரோட்டம் 42 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது, கடந்த ஆண்டுதான் புதிய தேர் அமைக்கப்பட்டது. தற்போது தேரோட்ட நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த ஆண்டு இரண்டாவது வருடமாக, திருத் தேரோட்டத்தை முன்னிட்டு 11 நாட்கள் நடைபெறும் விழா கடந்த 11 ஆம் தேதி தொடங்கியது. இதில் லட்சுமி நரசிம்மர் அன்ன வாகனம், சிம்மவாகனம், அனுமந்த வாகனம், சேஷவாகனம் என தினமும் பல்வேறு வாகனத்தில் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதே போல் திருக் கல்யாண உற்சவம்,கருட உற்வசம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீலட்சுமி நரசிம்மர் திருத்தேரில் வைத்து தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து பக்தர்கள் தேரின் வடம் பிடித்து கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டவாறு தேர் இழுத்தனர். இந்தத் திருத்தேர் விழாவில் தருமபுரி மாவட்டம் மட்டும் அல்லாமல் அண்டை மாநிலமான கர்நாடக, ஆந்திரா மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.



