நாமக்கல் அருகே டிவி பார்த்துக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை தாய் அடித்ததில் அந்தக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் நித்திய கமலா. இவர் தனது கணவர் பாண்டியன் மற்றும் ஐந்து வயது மகள் லத்திகாஸ்ரீயுடன் வசித்து வருகிறார்.
நேற்று வீட்டில் இருந்த 5 வயது பெண் குழந்தை லத்திகாஸ்ரீ டிவி பார்த்துக் கொண்டு இருந்ததாராம். படிக்கச் சொல்லிவிட்டு சென்றும், அவர் படிக்கவில்லை எனக்கூறி நித்தியகமலா குழந்தை லத்திகாஸ்ரீயை அடித்ததாகத் தெரிகிறது.
இதில் காயமடைந்த குழந்தை திடீரென மயக்கமடைந்துள்ளார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
நாமக்கல் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப் பட்ட நிலையில் சிறுமியின் நிலைமை மோசமாக இருந்ததால் அவரை மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், அங்கு சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதை அடுத்து, இந்தச் சம்பவம் குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நித்திய கமலத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்!