ரியல் எஸ்டேட் அதிபரைக் கடத்தி சரமாரி தாக்குதல்: முன்னாள் துணை மேயர் உட்பட 2 பேர் கைது

Published:

சென்னை: சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபரைக் காரில் கடத்தி சரமாரியாக அடித்து உதைத்தது தொடர்பாக திருநெல்வேலி திமுக முன்னாள் துணை மேயர் முத்துராமலிங்கம் உட்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர். சென்னை கோபாலபுரம் பத்மாவதித் தாயார் தெருவைச் சேர்ந்தவர் தன்ராஜ் (40). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு 4 பேர் காரில் வந்துள்ளனர். தன்ராஜிடம் பேசிக் கொண்டிருந்த அவர்கள், சற்று நேரத்தில் தன்ராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அடித்து உதைத்து அவரை காரில் தூக்கிப் போட்டு சென்றுள்ளனர். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதை அடுத்து, காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனிடையே அன்று நள்ளிரவு ரத்தக் காயங்களுடன் தன்ராஜ் வீட்டுக்கு வந்தார். போலீஸார் தன்ராஜை அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திருநெல்வேலி மாநகராட்சி திமுக முன்னாள் துணை மேயர் முத்துராமலிங்கம், நிலம் வாங்குவது தொடர்பாக தன்ராஜை அணுகியுள்ளார். இதையடுத்து நிலம் வாங் கித் தருவதாகக் கூறி முத்துராமலிங்கத்திடம் இருந்து ரூ.12 லட்சத்தை தன்ராஜ் வாங்கியுள்ளார். ஆனால் ஒப்புக்கொண்டபடி நிலம் வாங்கித் தராமலும், பணத்தைத் திருப்பித் தராமலும் தன்ராஜ் இழுத்தடித்துள்ளார். இதனால் பிரகாஷ் உள்ளிட்டோர் தன்ராஜை காரில் கடத்தி, தி.நகரில் உள்ள முத்துராமலிங்கம் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அங்கும் தன்ராஜை அடித்து உதைத்து முத்துராமலிங்கத்தின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். பின்னர் தன்ராஜை வெளியே விட்டுள்ளனர் என்பது தெரிந்தது. பின்னர், தன்ராஜ் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து திருநெல்வேலி மாநகராட்சி திமுக முன்னாள் துணை மேயர் முத்துராமலிங்கம்(45), அயனாவரம் தந்தை பெரியார் நகரைச் சேர்ந்த பிரகாஷ் (35) ஆகியோரைக் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். கடத்தலுக்குப் பயன்படுத்திய காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்தக் கடத்தலில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரை தேடி வருகின்றனர்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img