திருச்சி அருகே புரோட்டா மாஸ்டரை கடப்பாரையால் அடித்துக்கொன்ற ஹோட்டல் உரிமையாளர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். ஜீயபுரம் அருகேயுள்ள குழுமணி வெள்ளாளத் தெருவை சேர்ந்தவர் மூக்கன் மகன் அலங்கராஜ் (55). அப்பகுதியிலுள்ள புளியமர பேருந்து நிறுத்தத்தில் ஹோட்டல் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் வாத்தலை அருகேயுள்ள சென்னக்கரை பகுதியைச் சேர்ந்த ரெங்கசாமி மகன் சிவா(எ) சிவகுமார்(27) என்பவர் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார். ஹோட்டல் துவங்கிய நாள் முதல் வேலை செய்து வந்த சிவகுமாருக்கு, அங்குள்ள ஒரு நிதி நிறுவனத்தில் கடன் வாங்கிக்கொடுத்துள்ளார் அலங்கராஜ். இந்நிலையில் சிவகுமார் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வேலையிலிருந்து தான் நின்று கொள்வதாக அலங்கராஜியிடம் தெரிவித்துள்ளார். அப்போது அலங்கராஜ் நான் வாங்கிக்கொடுத்த கடன் தொகையை திருப்பிக் கொடுத்துவிட்டு செல் என்று கூறியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு பின்னர் கலைந்து சென்றனர். இந்நிலையில் நள்ளிரவு ஆத்திரம் தீராத அலங்கராஜ் கடையில் தூங்கிக் கொண்டிருந்த சிவகுமாரை கடப்பாரையால் தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த சிவகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்து போன சிவகுமாருக்கு ரேணுகா என்ற மனைவியும்,பவித்ரா என்ற 3 வயது பெண் குழந்தையும் உள்ளது. கொலை குறித்து தகவலறிந்த ஜீயபுரம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சிவகுமாரின் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்து அலங்கராஜை கைது செய்தனர்.
புரோட்டா மாஸ்டர் கடப்பாரையால் அடித்துக் கொலை: ஹோட்டல் உரிமையாளர் கைது
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

