
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்றுக் கொண்டார் ஏ.பி சாஹி! ஆளுநர் பன்வரிலால் புரோகித் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவைத் தலைவர் தனபால், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அவர் பதவி ஏற்ற பின்னர், ஆளுநர், முதலமைச்சர், சபாநாயகர் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

ஏ.பி.சாஹி என குறிப்பிடப்படும் அமரேஷ்வர் பிரதாப் சஹி, 1985 ஆம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவு செய்தார். 2004ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
2005ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், 2018ஆம் ஆண்டு நவம்பரில் பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் 49ஆவது தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி இன்று பதவியேற்றுக் கொண்டார்
பின்னர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல் ராஜ் மற்றும் பல்வேறு வழக்கறிஞர் சங்கங்களின் தலைவர்கள் தலைமை நீதிபதியை வரவேற்று பேசினர்.

அப்போது பேசிய ஏ.பி.சஹி, கலாச்சார பெருமை கொண்ட மாநிலத்துக்கு வந்துள்ளது பெருமை அளிக்கிறது என்றார். திருவள்ளுவர், ராமானுஜர் என எண்ணற்ற மேதைகளை தமிழகம் நாட்டிற்கு வழங்கியுள்ளது என்றார்.
15 ஆயிரம் வழக்கறிஞர்கள் கொண்ட உயர் நீதிமன்றத்தை தன்னுடைய குடும்பமாக எண்ணுவதாகவும், அக் குடும்பத்தை பெரிதும் நம்புவதாகவும் தெரிவித்தார்.
அனைவருக்கும் வணக்கம் எனத் தொடங்கி, இறுதியில் நன்றி, வணக்கம் என தமிழில் கூறி உரையை முடித்தார்.