சென்னை:
வரும் 9ஆம் தேதி வியாழன் அன்று சசிகலா முதல்வராகப் பொறுப்பேற்கலாம் என்று தெரிகிறது.
நேற்று நடைபெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், சட்டமன்ற குழு தலைவராக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தேர்வுசெய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக ஆளுநருக்கு கடிதம் அனுப்பினர். அவரது ராஜினாமா ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், நாளை அதிமுக சட்டமன்றகுழு தலைவர் சசிகலா ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க உள்ளார். அதையடுத்து நாளை மறுநாள் முதல்வராக பதவி ஏற்கிறார்.
அப்போது, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்ற கட்சி தலைவராகதான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதம் மற்றும் புதிய அமைச்சரவை பட்டியலை அவர் கொடுப்பாராம்.
பின் சசிகலாவை முதல்வராக பதவி ஏற்க ஆளுநர் அழைப்பு விடுப்பார் என்றும், வரும் வியாழக்கிழமை (9ஆம் தேதி) சசிகலா பதவி ஏற்பார் என்றும் தெரிகிறது. அதற்காக நூற்றாண்டு விழா மண்டபம் தயார் செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப் பணித் துறை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஆகியோர் போயஸ்கார்டன் சென்று சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், ஆளுநர் இன்று இரவோ அல்லது நாளையோ தான் சென்னை வருகிறார்.
எனவே, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வெளியே செல்லாதவாறு சென்னையிலேயே தங்கி இருக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 7ம் தேதியான நாளை இந்தப் பதவி யேற்பு விழா நடப்பதாக இருந்தது. ஆனால், நாள் சரியில்லை என்று ஜோதிடர்கள் சொன்னதால், அது 9ம் தேதிக்கு தள்ளிப் போயுள்ளதாகக் கூறப்படுகிறது.



