
சென்னை:
தேசத்துரோக வழக்கில் சிறையில் உள்ள மதிமுக., பொதுச் செயலர் வைகோ., தற்போது ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார்.
சென்னை ராணிசீதை மன்றத்தில் கடந்த 2009 ஜூலை 15-ந்தேதி ‘குற்றம் சாட்டுகிறேன்’ என்ற ஆங்கில மொழியில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட புத்தகத்தை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டு பேசினார். அப்போது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய வைகோ மீது தேச விரோத வழக்கு பதிவு செய்யப்பட்டது.
எழும்பூர் 13-வது குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த இந்த வழக்கு கடந்த ஏப்ரல் 4-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது வைகோ நேரில் ஆஜராகி, இந்த வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் அல்லது தன்னை சிறையில் அடைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அப்போது, அவரை சொந்த ஜாமீனில் செல்லும்படி நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. ஆனால் அதை அவர் ஏற்கவில்லை. இதை அடுத்து, அவரை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார். இதன்படி புழல் சிறையில் அடைக்கப்பட்ட வைகோ, கடந்த 17-ந்தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர் படுத்தப்பட்டார்.
தேச விரோத வழக்கை விசாரிக்கும் அதிகாரம் செசன்சு நீதிமன்றத்துக்குதான் உள்ளது என்பதால், வழக்கை சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றத்துக்கு மாற்றி, எழும்பூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு கடந்த 27-ந்தேதி நீதிபதி நசீமா பானு முன்பு விசாரணைக்கு வந்த போது, சிறையில் இருந்து வைகோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இருப்பினும், அப்போதும் வைகோ ஜாமீனுக்கு விண்ணப்பிக்கவில்லை. இந்நிலையில், இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி வைகோ திடீரென இன்று சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.


