சென்னை:
புதன் கிழமை நேற்று சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் மின்சுற்று பாதிப்பு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில், சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் 7 முதல் 3வது மாடி வரை எரிந்து விழுந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
தி சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் நேற்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் 28 மணி நேரத்துக்கும் மேலாக தீயை அணைக்க போராடி வருகின்றனர். சுமார் 400 வீரர்கள், சுழற்சி முறையில் இரவு பகலாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக பல தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
கட்டடத்தின் நான்கு புறமும் தீயணைப்பு வாகனம் மூலம் நீரை பீய்ச்சி அடிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சில நிமிடங்களில் 7 வது தளத்தில் மீண்டும் தீ பரவியது . 7 வது தளத்தில் ஊழியர்களுக்கு சமையல் செய்வதற்காக கேஸ் சிலிண்டர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதற்கிடையே கிரேன் மூலம் தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் அந்த தளத்தில் இருந்து அதிக அளவு புகை வெளியேறி வருகிறது.
ஸ்கை லிப்ட் மூலம் தீயை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சி தொடர்ந்து நடந்து வருகிறது. இதனிடையே விமான நிலையத்தில் இருந்து ராட்சத நுரைக்கலவை எந்திரம் வரவழைக்கப்பட்டு, கட்டடம் மீது நுரைக்கலவை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. நேற்று காலை 5 மணிக்குத் தொடங்கிய தீயணைக்கும் பணி இரவு முழுவதும் நடந்தது. ஷிப்ட் முறையில் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். தொடர்ந்து தீ எரிந்து வருவதால் தி.நகரே புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. துணிகள் எரிந்ததால் கரும் புகை வெளியில் வந்து கொண்டே இருக்கிறது. அதிகளவில் புகை வெளியேறியதால் மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து 500 மீட்டர் தொலைவுக்கு கர்ப்பிணிகள், குழந்தைகள் செல்ல வேண்டாம் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்தார்..
தொடர்ந்து தீயை அணைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணி அளவில், கட்டடத்தின் 3வது தளத்தில் இருந்து 7வது தளம் வரை திடீரென இடிந்து விழுந்தது. இதனால், தீயணைக்கும் வண்டிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், உடனடியாக அவை அங்கிருந்து அப்புறப்படுத்தப் பட்டன. கட்டடத்தின் முன் பகுதி முழுவதும் இடிந்து விழுந்து சேதம் அடைந்தன. கட்டடத்தின் பீம்கள், அடித்தளம் ஆகியவை அதிக வெப்பத்தின் காரணமாக வலுவிழந்து, மேலும் உடைந்து விடக் கூடும் என்று கருதப் படுவதால், அந்தப் பகுதியில் போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.