தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் மின்சாரம் பாய்ந்து தந்தை மகன் இருவரும் இறந்தனர்.
கிருஷ்ணாபுரம் பாரதியார் வடக்கு தெருவை சேர்ந்தவர் கணபதி மகன் சுப்பையா(79). இவரது மகன் முத்துராஜ்(30) வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் அருகே உள்ள டிராக்டர் நிறுத்துமிடத்தில் குளிப்பதற்காக சென்றாராம்.
அப்பொழுது மின் மோட்டார் அருகே கீழே கிடந்த கம்பி வலையில் மின்சார ஒயர் அறுந்து கிடந்தது தெரியாமல் அந்த வலையில் முத்துராஜ் கை வைத்துள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டாராம்.
குளிக்கச் சென்ற மகன் நீண்ட நேரமாகியும் வராததையடுத்து அவரது தந்தை சுப்பையாவும், அவரது நண்பர் ஒருவரும் டிராக்டர் செட்டுக்கு சென்றுள்ளனர்.
அப்பொழுது முத்துராஜ் கீழே கிடப்பதைப் பார்த்து அவர் அருகே சென்று தூக்க சென்ற சுப்பையா மீதும் மின்சாரம் பாய்ந்து அவரும் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இந்நிலையில், சுப்பையாவுடன் சென்ற அவரது நண்பர் மின்சாரத்தை துண்டித்தார். கடையநல்லூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.