
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று கண்டறியப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 98 பேர் கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில், 83 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று கண்டறியப்பட்டுள்ளது.
ஆலங்குளம் அருகே உள்ள கீழப்பட்டமுடையார்புரத்தைச் சேர்ந்த பெண் மற்றும் அவரது 2 குழந்தைகள், கடையநல்லூரைச் சேர்ந்த 34 வயது ஆண் என புதிதாக தொற்று கண்டறியப்பட்ட 4 பேரும் சென்னையில் இருந்து வந்தவர்கள் ஆவர். இதனால், தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது.
ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பின்னர் கடந்த சில நாட்களில் தென்காசி மாவட்டத்துக்கு வெளி நாடுகளில் இருந்து வந்த 53 பேர், வெளி மாநிலங்களில் இருந்து வந்த 1484 பேர், சென்னையில் இருந்து வந்த 1308 பேர், சென்னை தவிர பிற மாவட்டங்களில் இருந்து வந்த 1414 பேர் என மொத்தம் 4259 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களில் 156 பேர் முகாம்களிலும், மற்றவர்கள் வீட்டுத் தனிமையிலும் உள்ளனர். 7300க்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.