
சென்னை:
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும்; ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டு, நினைவில்லம் அமைக்கப்படும் என தமிழக முதல்லமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீர் அறிவிப்புகளை வெளியிட்டார்.
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும். ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் எனக் கூறினார்.
இது குறித்த இரு அறிக்கைகள் ஊடகங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட்டு அனுப்பப் பட்டன. இந்நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்ற முதலமைச்சரின் உத்தரவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்து வெளியாகியுள்ளது.
முதல்வரின் அறிவிப்புக்கு முதல் ஆதரவுக் குரல் ஓபிஎஸ் அணியில் இருந்து வெளியானது. ஓ.பன்னீர்செலவம் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், “ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம் என்ற அறிவிப்பு ஓபிஎஸ்ஸின் தர்ம யுத்தத்துக்குக் கிடைத்த வெற்றி. ஓ.பன்னீர்செல்வத்தின் முக்கிய நிபந்தனைகள் ஏற்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் பழனிசாமியின் அறிவிப்புகளை வரவேற்கிறோம். முதலமைச்சரின் அறிவிப்பு இணைப்பு பேச்சுவார்த்தைக்கான தடைகளை அகற்றி இருக்கிறது. போயஸ் இல்லத்தை நினைவிடமாக அறிவித்திருப்பதை வரவேற்கிறேன் எனக் கூறியுள்ளார்.
இதே கருத்தை வழி மொழிந்தார் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த கே.பி.முனுசாமி. அவர் இது குறித்துக் கூறியபோது, “ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரித்தால் தான் உண்மைகள் வெளிவரும் என்பதால் அதைக் கோருகிறோம். ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட வேண்டும். ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அது இன்னும் நிறைவேறவில்லை. சசிகலா குடும்பத்தை கட்சியிலிருந்து இன்னும் வெளியேற்றவில்லை. வேதா நிலையம் அரசு நினைவிடமாக மாற்றப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது” எனக் கூறினார்.
பாஜக., தேசியத் தலைவர் ஹெச் ராஜா கூறியபோது, வரவேற்கத்தக்க அறிவிப்பு இது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம் என்ற அறிவிப்பு இரு அணிகளின் இணைப்புக்கு வழிவகுக்கும் என்றார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியபோது, ஜெயலலிதா மரணம் தொடர்பாக நாட்டு மக்களுக்கு உண்மை தெரிந்தால் நல்லதுதானே. வேதா நிலையம் அரசு நினைவிடமாக மாற்றப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்றார். ஆனால், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்ஃபோன்ஸ், “6 மாதங்கள் கடந்த பிறகு ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம் என்பது காலம் கடந்த முடிவு. பதவியில் இருப்பதற்காக தினசரி ஒவ்வொரு முடிவுகளை அறிவிப்பது கவலை அளிக்கிறது. ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை நடுநிலையானதாகவும், சுதந்திரமாகவும் இருக்கும் என்று கூற முடியாது” என்றார்.
இதனிடையே, திமுக., செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறியபோது, “திமுகவைப் பொறுத்தவரை ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம் என்பது கண்துடைப்பு. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம் என்ற அறிவிப்பு பாஜக., கொடுத்த அழுத்தத்தின் காரணமாக வெளியிடப்பட்டது. அதிமுகவின் எல்லா அணிகளும் மாறி மாறி பாஜகவின் காலில் விழுந்துள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையத்தை திமுக கேட்ட போது முதலமைச்சர் பழனிசாமி ஏற்கவில்லை. பாஜகவின் விருப்பப்படி சசிகலா குடும்பத்தை ஓரம்கட்ட ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையத்தை அறிவித்துள்ளது தமிழக அரசு” என்று கூறினார்.
இதனிடையே டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்தத தங்க தமிழ்ச் செல்வன் கூறியபோது, “ஓபிஎஸ் கேட்டதற்காக ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைத்தார்கள் என்றால் மக்கள் பாடம் புகட்டுவார்கள். ஜெயலலிதா மரணத்தில் என்ன தவறு நடந்துள்ளது என்று நினைத்துக் கொண்டு விசாரணை ஆணையம் அமைக்கிறார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
இன்னும் இந்த அறிவிப்புகள் பெருவாரியாக ஆதரவும் எதிர்ப்பும் கிளப்பிய வண்ணம் உள்ளன.


