
சென்னையில் தனது மகள்கள் குளிப்பதை எட்டி பார்த்த நபரின் குடும்பத்தில் உள்ள 5 பேரை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் பல்லாவரம், சேலையூர் காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (45), கார்ப்பென்டரான இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். 2 மகள்களும் குளிக்கும் போது அடிக்கடி பக்கத்து வீட்டை சேர்ந்த ஏழுமலை (42) பாத்ரூம் வழியாக எட்டி பார்த்ததாக கூறப்படுகிறது. இதனை மகள்கள் தந்தை சீனிவாசனுக்கு தெரிவிக்கவே அவர் ஏழுமலையை கடந்த திங்கள்கிழமை கண்டித்துள்ளார்.
அப்போது சீனிவாசனுக்கும், ஏழுமலைக்கும் தகராறு ஏற்பட்டதில் சீனிவாசன் ஏழுமலையை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஏழுமலையின் மனைவி லட்சுமி (36), மகன் சதீஷ் (11), மாமியார் கோவிந்தம்மாள் (60), தங்கை தனபாக்கியம் (34) தனபாக்கியத்தின் மகள் சந்தியா (14) ஆகியோர் சீனிவாசனிடம் சென்று எப்படி ஏழுமலையை தாக்கலாம் என தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போதும் தகராறு அடிதடியாக மாறியுள்ளது. இதனால் சீனிவாசன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ஏழுமலையின் மனைவி லட்சுமி, மாமியார் ராஜேஸ்வரி, தங்கை தனபாக்கியம், மகன் சதீஷ், சந்தியா ஆகியோரை கை, கழுத்து, முகம் ஆகிய பகுதிகளில் சரமாரியாக குத்தியுள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த 5 பேரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சேலையூர் போலீசார் சீனிவாசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.